பயத்துக்கே பயம் காட்டும் தல Fan நான்! புல்லட்டை திருடிவிட்டு "கஞ்சா" ஆசாமி வாக்குமூலம்! நடந்தது என்ன
தேனி: தேனியில் பெண் போலீசாரிடம் திருடன் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நகைச்சுவையாக அப்பாவி போல இவர் பேசும் இந்த வீடியோ இணையத்தில் இப்போது ஹிட் அடித்துள்ளது.. என்ன நடந்தது?
தேனி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேனியில் சமீப காலமாக பல வீடுகளில் இருந்து பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.
இதையடுத்து தொடர் பைக் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதை பற்றி விசாரித்து வந்தனர். பைக் திருட்டு போன இடங்களில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

பைக் திருட்டு
அதில் ஒரே நபர் பல இடங்களில் பைக் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பைக்கை திருடிவிட்டு அதை விற்காமல், முழுவதும் பயன்படுத்தாமல் பெட்ரோல் தீரும் வரை ஓட்டிவிட்டு பின்னர் ஆங்காங்கே நிறுத்துவிட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் சமீபத்தில் தேனி அரண்மனை புதூர் விளக்கு பகுதியில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்று காணாமல் போனது. இதையடுத்து போலீசாரிடம் உடனே புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போக்கு காட்டி வந்த அந்த பைக் திருடனை நேற்று போலீசார் பிடித்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட என்பீல்ட் பைக்கை எங்கே வைத்து இருக்கிறாய் என்று பெண் போலீசார் கேட்டதற்கு அந்த திருடன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

வாக்குமூலம்
அந்த திருடன் தனது வாக்குமூலத்தில், திறந்த வீட்டில் நாய் நுழைந்தது போல நுழைந்து அந்த வீட்டிற்கு யாரும் இல்லாத நேரம் சென்று அங்கு ஆடம்பரத்திற்காக வாங்கி வைத்து இருந்த 2.17 லட்சம் ரூபாய் பைக்கை திருடினேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இந்த பைக் விலை உயர்ந்துவிட்டது. அந்த பைக் சாவியோடு கண்ணாடி மாளிகையில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடம் சரியாக நியாபகம் இல்லை.

தேனி திருடன்
அந்த வீட்டின் எழில் மிகு தோற்றம், அமைப்பு, ரம்மியமான, காட்சிக்கு உரிய, ரசனைக்கு உரிய, சிற்பிகளின் எழுத்துக்கள், வாசகங்கள், வரைபடங்கள் அடங்கி அழகாக இருந்தது. ஆசையை தூண்டும் விதமாக, தப்பு செய்ய வாய்ப்பு கொடுக்கும் விதமாக அந்த பைக் சாவியோடு இருந்தது. பயத்திற்கே பயம் காட்டும் தல பேன் நான். இதனால் நான் அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு கணவாய் தாண்டி இருக்கும் சோதனை சாவடி மையத்தின் பக்கம் இருக்கும் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்து இருக்கிறேன்.

கஞ்சா
கஞ்சா வாங்க கோடாங்கி பட்டிக்கு வந்தேன். நான் கஞ்சா அடிக்ட். நான் உதயநிதி ஸ்டாலினுக்கும், ரவீந்திரநாத் தாகூர் எம்பிக்கும், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ராஜ்நாத் சிங்கிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கும், டிஐஜி சைலேந்திர பாபுவிற்கும் நான் அடிக்கடி கவிதை எழுதி அனுப்பி இருக்கிறேன். நான் இப்போது போதையில் இல்லை.

வாழ்க்கை தெளிவு
வாழ்க்கையில் தெளிவாக இருக்க வேண்டும். நான் நன்றாக திருந்தி இருப்பேன்.. போலீஸ் விசாரணைக்கு கண்டிப்பாக வருவேன், என்று அந்த கஞ்சா ஆசாமி போதையில் குறிப்பிட்டு இருக்கிறார். போதையில் இவர் இப்படி வெளிப்படையாக கொடுத்த வாக்குமூலம் அவரின் பேச்சு நடை, வார்த்தை பிரயோகங்கள் காரணமாக இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. இவரிடம் பைக் திருட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications