பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி.. தேனி கலெக்டர் விளக்கம்
தேனி: பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி, வாழை, வெங்காயம், தக்காளி, கத்தரி மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு 61 பிர்காக்கள், சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் ராபி பருவத்தில் மக்காச்சோளம், வாழை, கத்தரி, முட்டைகோஸ், கொத்தமல்லி, தக்காளி ஆகிய பயிர்களுக்கு 27 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டு அதன் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டாயம் பிடித்தம் செய்து பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
காரீப் பருவ பயிர்களை பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர நெல் மற்றும் எள் பயிருக்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாள். நிலக்கடலை பயிருக்கு ஆகஸ்டு 30-ந்தேதியும், துவரைக்கு செப்டம்பர் 16-ந்தேதியும், மக்காச்சோளத்துக்கு செப்டம்பர் 30-ந்தேதியும், தோட்டக்கலை பயிர்களில் வாழைக்கு செப்டம்பர் 16-ந்தேதியும், கத்தரி, தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு செப்டம்பர் 1-ந்தேதியும், மரவள்ளி கிழங்கிற்கு செப்டம்பர் 16-ந்தேதியும் கடைசி நாள் ஆகும்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications