போலீஸ் ஸ்டேசனுக்கே பாதுகாப்பு போடனும் போலயே..கைவரிசை காட்டியவர்களுக்கு மாவுக் கட்டு! திகுதிகு தேனி!
தேனி: தேனி மாவட்ட அல்லிநகரம் அருகே போலீஸ் ஸ்டேஷன் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததோடு, பிடிக்க முயன்ற போலீஸ்காரரின் மண்டையை உடைத்த கொள்ளையர்கள் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈஸ்வர் நகர் என்னும் பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் தேனி மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு இந்த காவல் நிலையத்தின் மாடியில் ஏறிய இருவர் மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்ட சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அவசர போலீஸ் உதவி எண் 100க்கு போன் செய்து தகவல் அளித்தனர்.
உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு பைக் பாட்ரோல் இரவு காவல் பணியில் இருந்த முருகேசன் என்ற முதல் நிலைக் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவரைக் கண்டதும் மாடியில் இருந்து குதித்த இரண்டு கொள்ளையர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகன மூலம் தப்பி ஓட முன்றனர். அவர்களை முருகேசன் பிடிக்க முயன்ற போது, அதில் ஒருவர் முதல் நிலைக் காவலர் முருகேசனை கல்லை எடுத்து தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினான். இதில் முதல் நிலைக் காவலர் முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மற்றொருவன் மட்டும் பிடிபட்டான். பிடிபட்ட கொள்ளையனிடம் ஒரு ஏர்கன் துப்பாக்கி, 24 செல்போன்கள், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, பைனாகுலர், கஞ்சா ஆயில் 650 மில்லி, 50 கஞ்சா பொட்டலங்கள், வெள்ளை பவுடர், கை விலங்கு உள்ளிட்ட பொருட்கள் இருப்பதைக் கண்டு முதல் நிலைக் காவலர் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு வந்த எஸ்.எஸ்.ஐ.ரமேஷ் உடன் இணைந்து பிடிபட்ட கொள்ளையனை அல்லிநகரம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவன் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த நிதீஷ்குமார் என்பதும்,தப்பி ஓடிய கொள்ளையன் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் உதயகுமார் (23)என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு பண்ணைப்புரம் சென்ற காவல்துறையினர் அங்கு வீட்டில் பதுங்கி இருந்த உதயகுமாரை கைது செய்து அல்லிநகரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரை கல்லால் தாக்கி ரத்த காயத்தை ஏற்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நித்திஷ்குமார் தப்பியோட முயன்றபோது கால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு கொள்ளையன் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் சிக்கிய நித்திஷ்குமார் மற்றும் உதயகுமார் ஆகிய இருவர் மீதும் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை, அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு இருவரும் கஞ்சா வழக்கில் சிக்கிய போது, தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது, இருவருக்கும் காவல்துறையினர் பல்வேறு இடையூறுகளை அளித்ததாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்ததாகவும், அதன் காரணமாக போலீசாரை பழிவாங்குவதற்காக இருவரும் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய வேறு யாருக்கேனும் ஆவணங்களை கொள்ளையடித்து செல்ல கூலிப்படையாக இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காவல் நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை மறைக்க காவல்துறையின் சார்பாக பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்ட போதும், செய்தி காட்டுத்தீ போல பரவியதால் காவல்துறையினரால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.
மேலும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் நிலையத்தில் போலீசார் இரவு பணியில் இருப்பதே இல்லை எனவும் கூறப்படுகிறது.இரவு நேரத்தில் இந்த காவல் நிலையம் பூட்டியே கிடப்பதுடன், சிசிடிவியும் இல்லை.இதன் காரணமாகவே கொள்ளையர்கள் துணிச்சலுடன் வந்து கொள்ளையடித்துள்ளனர்.
துமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காவல் நிலையம் சென்று காவல்துறையினரிடம் முறையிடலாம். ஆனால் காவல் நிலையங்களுக்கும் காவல்துறையினருக்குமே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என்கின்றனர் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications