பணக்கார சகவாசம் வேண்டாம்..சம்பந்தியை போட்டுத் தள்ள டாக்டர் ப்ளான்! பரபர சிசிடிவி.. காதல் ஜோடி வீடியோ
தேனி: தேனியில் மகளைக் காதலித்து திருமணம் செய்த நபரின் தந்தை மீது சினிமா பாணியில் காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற மருத்துவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் திருமணம் செய்து கொண்ட பின் தங்கள் உயிருக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காதல் ஜோடி வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் கருமலையான் கோவில் தெருவில் வசித்து வருபவர் காசிராஜன். இவரது மகன் மதுர வீர கார்த்திக். இவர் கம்பம் பகுதியைச் சேர்ந்த டாக்டர்.மணிகண்டன் என்பவரது மகள் டாக்டர்.பத்மஸ்ரீலேகா என்பவரை கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் அறிந்த பத்மஸ்ரீ லேகாவின் தந்தை டாக்டர். மணிகண்டன் இருவரையும் எச்சரித்துள்ளார். ஓடைப்பட்டி பகுதி மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் டாக்டர். மணிகண்டன் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்.
தனது மகளையும் டாக்டருக்கு படிக்க வைத்ததுடன் நல்ல வசதியான டாக்டர் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஏழ்மை நிலையில் உள்ள மதுரவீரர் கார்த்திக் உடன் பத்மஸ்ரீ லேகாவிற்கு காதல் ஏற்பட்டது டாக்டர் மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக மதுரவீரர் கார்த்திக்கின் தந்தை காசிராஜன் என்பவரையும் சந்தித்து எச்சரித்துள்ளார். இதனால் பணக்கார சகவாசம் தங்களுக்கு வேண்டாம் என்று மகனுக்கு புத்திமதி கூறியுள்ளனர். இந்த நிலையில் மதுர வீர கார்த்திக்கும், பத்மஸ்ரீ லேகாவும் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னை மயிலாப்பூருக்கு சென்று அங்கு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், தனது மகனை காணவில்லை என்று கடந்த இரண்டாம் தேதி காசிராஜன் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகள் வீட்டை விட்டு சென்று சென்னையில் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்து தேவாரத்திற்கு தேடி வந்த டாக்டர். மணிகண்டன் சாலையோரம் நின்றிருந்த காசிராஜனை பார்த்தவுடன் ஆத்திரத்தில் காரை அவர் மீது ஏற்றியுள்ளார். இதில் காசிராஜன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மருத்துவர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கும்படி காசிராஜன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட பத்மஸ்ரீ லேகாவும், மதுர வீர கார்த்திக்கும் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் பத்மஸ்ரீ லேகா பேசும்போது, தனது தந்தை அரசு மருத்துவ அதிகாரியாக உள்ளதால் அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக திகழ்கிறார் மதுர வீர கார்த்திக்கின் தந்தை காசிராஜன் என்பவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் இருவருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தேவாரம் காவல் நிலையம் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் மருத்துவர் மணிகண்டனின் செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, காசிராஜன் பெயரில் அனைத்து ஊடகங்களுக்கும் மேற்கண்ட ஆவணங்களுடன் இணைத்து செய்தி வெளியிட்டு உதவுமாறு இமெயில் மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications