சினிமா பாணியில் பலநாள் திட்டம்.. தேனியில் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்.. அதிர்ச்சி பின்னணி
தேனி: தேனியில் துரைபாண்டி என்ற நபர் தனது மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையில் துரைப்பாண்டி பல நாள் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் அங்கு உள்ள மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த மில்லில் வேலை பார்த்து வந்த துரைபாண்டி என்ற நபரை காதலித்த உமா மகேஸ்வரி பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் தங்கி அங்கேயே வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். கடந்த 5 வருடமாக இவர்களுக்கு இடையில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டாலும் பெரிதாக பிரச்சனை எதுவும் இன்றி வாழ்ந்து இருக்கிறார்கள்.

குழந்தை
இவர்களுக்கு 3 வயதில் வெற்றிமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது. அதேபோல் புவனேஷ்வரன் என்ற 6 மாத குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் புவனேஷ்வரன் பிறந்த பின்புதான் கணவன் மனைவிக்கு இடையில் நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை வந்துள்ளது. துரைபாண்டி கோபமாக மனைவியை அடிக்கடி தாக்கி உள்ளார்.

மோதல்
பல முறை உமா மகேஸ்வரியை மோசமாக தாக்கி துரைபாண்டி கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த மோதலில்தான் உமா மகேஷ்வரி கணவருடன் இருக்க பிடிக்காமல் தேனியில் தங்கி உள்ளார். அங்கு அத்தை வீட்டில் குழந்தைகளுடன் தங்கி உள்ளார். ஆனால் அங்கேயும் உமாமகேஷ்வரியை அடிக்கடி நேரில் வந்து துரைபாண்டி தொந்தரவு செய்துள்ளார். அடிக்கடி இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்தை வீடு
இதனால் அத்தை வீட்டிலும் இருக்க விருப்பம் இல்லாமல் அருகில் இருந்த பெண்கள் காப்பகம் ஒன்றில் உமா மகேஷ்வரி சேர்ந்துள்ளார். கணவன் வர கூடாது என்பதால் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களாக அங்கேயே உமா மகேஷ்வரி தங்கி இருந்தார். ஆனால் அந்த இடத்தையும் கண்டுபிடித்து துரைபாண்டி நேரில் வந்து பிரச்சனை செய்துள்ளார். இந்த நிலையில்தான் துரைபாண்டிக்கு எதிராக உமா மகேஷ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோபம்
போலீஸ் புகாருக்கு பின் இருவருக்கும் இடையில் சமாதானம் பேசப்பட்டு மீண்டும் இருவரும் சில நாட்கள் சேர்த்து வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் அதன்பின் மீண்டும் துரைபாண்டி ஒருநாள் குடித்துவிட்டு வந்து மீண்டும் உமாமகேஷ்வரியை மோசமாக தாக்கி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த உமா மகேஷ்வரி மீண்டும் தேனிக்கு திரும்பி சென்று காப்பகத்தில் தங்கி உள்ளார். இந்த நிலையில்தான் உமா மகேஷ்வரியை கொன்றுவிடும் திட்டத்தில் துரைபாண்டி அவரை பின் தொடர்ந்து உள்ளார்.

காப்பகம்
காப்பகத்திற்குள் எகிறி குதித்து கொலை செய்வதற்காக கடந்த சில நாட்களாக அங்கேயே சுற்றி வந்து இருக்கிறார் துரைபாண்டி. சினிமா பாணியில் கடந்த ஒரு வாரமாக அவர் திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த இடம் வழியாக எகிறி குதிக்க வேண்டும். எப்படி உமா மகேஷ்வரி இருக்கும் அறைக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு பொறுமையாக காத்திருந்து நேற்று பாதுகாப்பு இல்லாத நேரம் பார்த்து அந்த காப்பகத்திற்குள் எகிறி குதித்து உள்ளார்.

கொலை
இரவு நேரம் பார்த்து காப்பகத்திற்கு உள்ளே சென்ற துரைபாண்டி உமாமகேஷ்வரி அறைக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். அங்கேயே அரிவாளால் மோசமாக தாக்கி உமா மகேஷ்வரியை துரைபாண்டி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த உமா மகேஷ்வரி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மனைவியை கொலை செய்துவிட்டு வந்த வழியாகவே துரைபாண்டி தப்பித்து ஓடி விட்டார். இவரை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications