கேண்டீனுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம்? தேனி அரசு மருத்துவ கல்லூரி டீன் சஸ்பெண்ட்
தேனி: கேண்டீனுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்தரார் மாரிமுத்து என்பவரிடம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள், மருத்துவ மாணவ -மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் என தினமும் ஆயிரக்கணக்கனோர் வருகை தருவது வழக்கம். இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கேண்டீன்கள் உள்ளன. இந்த கேண்டீன்களை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், அங்குள்ள கேண்டீனுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாரிமுத்து என்ற ஒப்பந்தராரிடம் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூ.20 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்படும் 4 தனியார் கேண்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குங்கள்.
எங்களால் கேண்டீனை நடத்த முடியவில்லை. நீங்கள் 10 லட்சம் ரூபாய் கேட்டீர்கள் 6 லட்சம் கொடுத்துவிட்டேன். மீதி 4 லட்சம் கொண்டு வந்து இருக்கிறேன். வாங்கி கொள்ளுங்கள் என ஒப்பந்தரார் பேசும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாகவும் கூறப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவியது. மருத்துவமனை டீன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்று இருந்தது.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம், நான் லஞ்சம் பெறுவதாக பரவும் வீடியோ உண்மையில்லை. நான் யாரிடமும் பணம் பெறவில்லை. என்னிடம் லஞ்சம் கொடுப்பதாக பரவும் வீடியோ அப்பட்டமான பொய். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. நான் பணியில் இருந்து காலம் முதல் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கேண்டீன்கள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை.
இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தேன். இதனை மனதில் வைத்து கொண்டு எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி உள்ளனர். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வீடியோவை பரப்பியுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், புகாருக்கு உள்ளான தேனி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். புகாருக்கு உள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications