கம்பம் அருகே பயங்கரம்.. கோயிலுக்குள் நுழைந்து பூசாரி வெட்டி கொலை
தேனி: கம்பம் அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சுருளியில் பூத நாராயணன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகவும் சுருளி மலை சொல்லப்படுவதுண்டு.

அமாவாசை, பவுர்ணமி, போன்ற விசேஷ நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு வருகை தருவதுண்டு. இறந்த தங்கள் முன்னோர்களுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த தலமாக இது விளங்கி வருகிறது.

இந்நிலையில், கோயிலுக்குள் பூசாரி மலைமான் மற்றும் பாலசுப்ரமணியன் இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க 2 பேர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு பூசாரியும் பாலசுப்பிரமணியனும் விழித்து கொண்டனர்.

கொள்ளையர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் பூசாரி மலையனின் தலையில் பலமாக தாக்கினர். அவரை காப்பாற்ற வந்த பால சுப்பிரமணியனையும் மர்மநபர்கள் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பூசாரி மலைமான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பாலசுப்ரமணியன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலசுப்ரமணியனை சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூசாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவிலுக்குள் புகுந்து பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications