சொந்த மண்ணில் சாய்ந்தார் இயக்குனர் இமயம்.. 72 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம்
தேனி: பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த மண்ணில், பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த பொதுமக்கள் பாரதிராஜாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.. தமிழக அரசு சார்பில் நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.. இறுதியில் காவல் துறையினர் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், பண்ணை தோட்டத்தில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையையும், யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும் உலகத் தியேட்டர்களுக்கு கொண்டு சேர்த்த "இயக்குநர் இமயம்" பாரதிராஜா, தனது 84வது வயதில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை என காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்த இமயத்தின் மறைவு, தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பொன்னான அத்தியாயத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ள ஒரு உருக்கமான தகவல், திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி, கண்கலங்க வைத்து விட்டது.
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தேனியை நோக்கித் தன் பார்வையை திருப்பியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பாரதிராஜா உடல் இன்று அடக்கம்
மேலும் பாரதிராஜாவோடு சினிமாவில் சரித்திரம் படைத்த இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மூத்த நடிகர் சிவக்குமார், சூர்யா, இயக்குநர் பாக்யராஜ், மாரி செல்வராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அரசியல், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
இயக்குநர் இமயத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று ஒருநாள் மட்டும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது.
வத்தலகுண்டு பண்ணை
சென்னை நீலாங்கரை இல்லத்தில் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பிறகு அவரது சொந்த மாவட்டமான தேனிக்கு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டது.
வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோட் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்தப் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து தங்களின் மண்ணின் மைந்தனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..
சொந்த மண்ணில் நிரந்தர ஓய்வு
இந்தச் சூழ்நிலையில்தான், பாரதிராஜாவின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் அந்த உருக்கமான கடைசி ஆசை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் பாரதிராஜா தங்கியிருந்தபோது, தனது இறுதிப் பயணம் குறித்து மிகவும் எதார்த்தமாகவும் உருக்கமாகவும் பேசினாராம்.
"நான் இறந்துவிட்டால், என் உடலை சென்னையில் வைக்கக் கூடாது, வத்தலகுண்டுவில் உள்ள என் தோட்டத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று தனது மகளிடம் உருக்கமாகத் தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் ஆடம்பரங்களை விட, தனக்கு முகவரியும் வாழ்வும் கொடுத்த கிராமத்து மண்ணையே தனது இறுதி ஓய்விடமாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அவரது மண் பற்றைக் காட்டுகிறது.
உறுதிசெய்த வைரமுத்து
பாரதிராஜாவின் உடல் அடக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சொல்லும்போது, "பாரதிராஜாவின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்று பாரதிராஜாவின். குடும்பத்தார் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல பாரதிராஜாவின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி" என்றார்.
தேனியில் குவிந்த பிரபலங்கள்
இதையடுத்து பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டே, அவரது குடும்பத்தினர் உடலை வத்தலகுண்டு தோட்டத்திற்குத் கொண்டு வந்தனர். சொந்த மண்ணில் இயக்குனரின் உடலை கண்டு, அங்குள்ள மக்கள் துக்கம் தாளாமல் வெடித்து கதறி அழுதபடியே சென்றனர்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த ரசிகர்களும், பொதுமக்களும், பாரதிராஜாவுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள்..
அவரது இறுதிப் பயணத்தில் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி, பேரரசு, நடிகர் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பாரதிராஜாவின் உடலுக்கு அருகே சோகம் அப்பிய முகத்துடன் காணப்பட்டனர். தொடர்ந்து வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் வத்தலகுண்டு பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளதால், தேனி மாவட்டம் முழுவதுமே சோகத்தின் பிடியில் விழுந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிராஜாவின் மகளை அரவணைத்து வந்ததோடு, அவரது சகோதரர் ஜெயராஜைக் கட்டியணைத்துக் கதறி அழுததும், திமுக கூட்டணி எம்.எல்.ஏ ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதும் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
வடிவேலு கதறல்
மேலும், கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலைப் பார்த்து நடிகர் வடிவேலு உடலெங்கும் குலுங்கி அழுதுகொண்டே அமர்ந்திருக்க, அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து, நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷா மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், வெற்றிமாறன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நண்பனின் பிரிவைத் தாங்க முடியாமல் அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ், கண்கலங்கியபடியே காணப்பட்டார்.. அமைச்சர் வன்னி அரசு இயக்குனர் இமயத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமாவின் கிராமிய எதார்த்தத்திற்குப் புதிய இலக்கணம் வகுத்துக் கொடுத்த இந்த மாபெரும் இயக்குனரின் மறைவால் இப்படி ஒட்டுமொத்த தேனி மாவட்டமே கண்ணீர் கடலில் மிதந்தது.
700-க்கும் மேற்பட்ட போலீசார் தேனியில் நள்ளிரவிலேயே பாதுகாப்புக்காக குவிந்தனர்.. முன்னதாக நல்லடக்கம் செய்யும் இடத்தில் தென்மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டிருந்தார்.. தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, தேனி ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகே தேனி காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணையில் பாரதிராஜா உடல் வேனில் கொண்டு வரப்பட்டது.
இறுதி அஞ்சலி
தேனி பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க, பாரதிராஜாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
இதையடுத்து, பாரதிராஜா உடல் அவரது பண்ணை வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, தேவதானப்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்து வரப்பட்டது.. அங்கு பாரதிராஜாவின் சகோதரர் இறுதிச்சடங்கினை செய்தார்..
தமிழக அரசு சார்பில் நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.. அரசு சார்பில் மலர்வளையம் வைக்கப்பட்டது-. பிறகு காவல்துறையினர் அணிவகுப்புடன் இறுதி மரியாதை நடத்தப்பட்டது.. போலீசார் 72 குண்டுகள் முழங்க, பாரதிராஜா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications