தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் இவ்வளவு அலட்சியம்.. என்னாச்சுன்னு பாருங்க
தேனி அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையை கடக்கும் முன்பு சாலையில் இருபுறமும் பார்த்துவிட்டே கடக்கவேண்டும். செல்போனில் பேசிக்கொண்டோ, அல்லது சாலையில் வாகனங்கள் வருவதை கவனிக்காமல் கடக்க முயன்றால் கடைசியில் உயிரையே இழக்க வேண்டியது வரும்.

பல விபத்துக்களுக்கு முக்கிய காரணம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் கடந்து செல்லும்போது முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது மட்டுமே காரணமாக இருக்கும். சிலர் இண்டிகேட்டரை போடாமல் திடீரென இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ உள்ள வளைவில் திருப்புவார்கள். அப்படி செய்யும் போது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சாலையோரத்தில் நிறுத்தி போன் பேசிவிட்டு, அப்படியே போனில் பேசியபடியே திடீரென வாகனத்தை எடுத்துக்கொண்டு நடுசாலையில் செல்ல முயற்சிப்பதோ அல்லது சாலையை கடக்க முயல்வதோ மிகவும் ஆபத்தானது ஆகும். இந்த சம்பவம் அப்படித்தான் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் பங்களாப்பட்டி பிரிவு பகுதியில் பெரியகுளம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஜெயபிரகாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்தவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்து வருவதை பார்த்துக் கொண்டே சாலையைக் கடப்பதும், அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மீது மோதிய போது, அதில் பயணித்த ஜெயபிரகாஷ் தூக்கி வீசப்படுவதுமாக சிசிடிவி காட்சி உள்ளது. இந்த விபத்து குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications