தேனியில் ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து.. நிலம் வாங்குவோர் கவனிக்க வேண்டிய மூலப்பத்திரம்.. நோட் பண்ணுங்க
தேனி: பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முறைகேடாக வாங்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஓ பன்னீர்செல்வம் செய்த தவறு என்ன.. பஞ்சமி நிலத்தை வாங்கி வைத்துள்ளீர்களா..அல்லது நீங்கள் வாங்க போகும் நிலம் பஞ்சமி நிலமா.. நிச்சயம் இதை எல்லாம் நோட் பண்ணுங்க.
தேனி மாவட்டம், ராஜாகளம் என்னுமிடத்தில் உள்ள 40 சென்ட் பஞ்சமி நிலம், 1991 ம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. நிபந்தனையின் படி, 15 ஆண்டுகளுக்கு நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய இயலாது. அதன்பிறகும், அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க இயலும்.அதாவது பட்டியல் இனத்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும்.

இந்த நிபந்தனையை மீறி, மூக்கன் இந்த நிலத்தை பட்டியலினத்தைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்கு 2008ம் ஆண்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். ஹரிசங்கரிடம் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிலத்தை வாங்கி, தனது பெயரில் பட்டா வாங்கியுள்ளார். நிபந்தனையை மீறி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரை விசாரித்த ஆதிதிராவிடர் ஆணையம் , பஞ்சமி நிலத்தை பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டது. முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நிலம் வாங்குவோர் தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது ஆதிதிராவிடர் ஆணையம் .
எனவே நிலம் வாங்குவோர் அவரது பட்டா இருக்கிறது என்று நினைத்து மட்டும் வாங்கிவிடக்கூடாது.அப்படி நீங்கள் வாங்கிய நிலம் முந்தைய காலத்தில் பஞ்சமி நிலமாகவோ, கள்ளர் ஜாதி நிலமாகவோ அல்லது பிற சமூகத்திற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளுடன் வழங்கப்பட்டநிலமாகவோஇருந்தால் கண்டிப்பாக சிக்கல் தான் வரும். நிலம் வாங்க போகிறார்கள், அந்த நிலத்தின் மூலப்பத்திரம் என்னவென்று பார்த்து,அது என்ன நிலம் என்பதை அறிய வேண்டும்.அந்த நிலம் பஞ்சமி நிலம் என்று இருந்தால் தயவு செய்து வாங்கிட வேண்டாம். பட்டா வாங்க முடியும் என்று யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள்.. அதேநேரம் பஞ்சமி நிலங்களை ஆதிதிராவிடர்கள் மற்றும்பழங்குடியினர் வாங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மற்ற சமூகத்தினர் தான் வாங்க முடியும்.
இப்படி மற்ற சமூகத்தினர் வாங்க முடியாத நிலங்களை முன்னொரு காலத்தில் தெரியாமல் வாங்கி விட்டு பட்டா வாங்க முடியாமல் இப்போது பலரும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அரசு மாற்று வழிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏழை எளிய மக்கள் பலர் இப்படி ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான நிலம் மற்றும் வீட்டினை வாங்கி உள்ளார்கள்.அவர்கள் வரும் காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை உள்ளதால், பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications