"ஓபிஎஸை திட்டுவது என் வேலை இல்லை.!" டோனை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்.. கடுப்பான தொண்டர்கள் கூச்சல்
தேனி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பிறந்த நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு அதிமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள் சமயத்தில் தமிழகத்தில் உள்ள இரு திராவிட கட்சிகளின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் -மாவட்டச் செயலாளர் தேர்தல்! அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
அண்ணா பிறந்த நாள்
தமிழ்நாடு முழுக்க அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி- வைகை அணை சாலை பிரிவில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
ஓபிஎஸ்ஸை திட்டுவது
பல்வேறு விஷயங்கள் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தைத் திட்டி பேசுங்கள் என்று உரக்கக் கத்தினார். இதைக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், "ஓபிஎஸ்ஸை திட்டி பேசுங்கள் என ஒருவர் சொல்கிறார். அவரை திட்டுவதற்கா இந்த கூட்டத்தைப் போட்டோம். இதுவரை யாரும் கூறாத விஷயங்களைப் பேசத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார்.
கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது கூட்டத்தில் இருந்து மற்றொருவர் பழையதைப் பேசி பேசி தவிச்சுபோச்சு என்று கத்தினார். இதைக் கேட்டு டென்ஷன் ஆன திண்டுக்கல் சீனிவாசன், "பிடிச்சு இருந்தால் மட்டும் இருங்கள். இல்லைனா கூட்டத்தை விட்டு வெளியே போய்விடுங்கள். ரீல் விட்டு கலகம் செய்கிற வேலையை எல்லாம் யாரும் இங்குச் செய்யக்கூடாது. எதையும் சந்திக்க நாங்கள் தயார்" என்று அவர் பதில் அளித்தார்.
கடுகடுத்தார்
மேலும், சபையில் நடந்ததை தான் சொல்வதாகக் குறிப்பிட்ட அவர், யாருமே இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்றும் மக்களிடம் உண்மையைப் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்தார், இருந்த போதிலும் அங்குக் கூச்சல் நின்றதாகத் தெரியவில்லை. இதையடுத்து சில நிர்வாகிகள் கூச்சலை எழுப்பியவர்களைச் சமாதானம் செய்யக் கீழே இறங்கிச் சென்றுள்ளனர். அவர்களையும் "ஆள் ஆளுக்கு எந்திரிச்சு செல்லாதீர்கள் என்னைப் பேச விடுங்கள்" என்று கடுகடுத்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
மவுனம்
மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேசத் தொடங்கிய போதும் கூட்டத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பேச விடாமல் கத்திக் கொண்டு இருந்தனர். அவர்களைத் திண்டுக்கல் சீனிவாசன் சமாதானம் செய்து கொண்டு இருந்த போது, அருகே இருந்த பள்ளிவாசலில் இருந்கு தொழுகை நடக்கும் ஒலி கேட்டது. இதையடுத்து அப்படியே தனது பேச்சை நிறுத்திக் கொண்ட அவர், மேடையிலேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டார்.
புலம்பல்
அதன் பின்னரும் கூட திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது கீழே இருந்து தொண்டர்கள் அவருக்கு எதிராகப் பேசி வந்தனர். இது தொடர்பாக ஒரு கட்டத்தில் வாக்குவாதமே ஏற்பட்டுவிட்டது. இதனால் அங்குக் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டது. அண்ணா பிறந்த நாள் விழாவில் பேச வந்த திண்டுக்கல் சீனிவாசன் கடைசியில் தொண்டர்களைச் சமாதானப்படுத்துவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட்டார்.