பற்களை பிடுங்கிய விவகாரம்: 24 போலீசார் மீது அதிரடி நடவடிக்கை.. நெல்லை மாவட்ட எஸ்.பி உத்தரவு!
திருநெல்வேலி : விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த போலீசார் 24 பேரை பணியிட மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட வழக்கில் சிக்கி ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications