அரிவாளைக் காட்டி ஆசிரியர்களுக்கு மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது.. நாங்குநேரியில் நடந்த பகீர் சம்பவம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள அரசுப் பள்ளியில் அரிவாளைக் காட்டி ஆசிரியர்களை மிரட்டிய 3 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்களால் அதிர்ந்து வரும் நெல்லையில், ஆசிரியர்களை அரிவாளைக் காட்டி மாணவர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் வகுப்பறையில் சில மாணவர்கள் பெஞ்சுகளை கைகளால் தட்டி சக மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மேலும், மாணவிகளையும் கிண்டல், கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஆசிரியர்கள் அந்த மாணவர்களைக் கண்டித்து எச்சரித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் புத்தகப் பைகளில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆக்ரோஷமாக எடுத்து ஆசிரியர்களை மிரட்டி வகுப்பறையில் இருந்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நாங்குநேரி காவல் நிலையத்தில் சங்கர் ரெட்டியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 7 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர்களை நெல்லை இளைஞர் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தினர். இதில், 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மற்ற 4 மாணவர்களுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடியை அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருதரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கியதில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2 ம் தேதி நெல்லை, நாங்குநேரி, விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே பாட்டிலில் இருந்த தண்ணீரை சிந்தியதற்காக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்த மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதிதிராவிட மாணவர் மீது சாதிய ரீதியாக தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது முறையாக பள்ளி மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே தொடர்ந்து வந்த இப்பிரச்னைகள் தற்போது தனியார் மாணவர்களுக்கிடையேயான பள்ளியிலும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை மாணவர்களுக்கிடையே 3 மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்நிலையில், நாங்குநேரி அரசுப் பள்ளியில் அரிவாளைக் காட்டி ஆசிரியர்களை மிரட்டிய மாணவர்கள் கைது செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications