தாய், தங்கை, குழந்தை என பைக்கில் 4 பேர்.. எமனாக வந்த டிப்பர் லாரி.. சின்ன தவறு.. யாருமே இல்லை
நெல்லை: நெல்லை கல்லிடைக்குறிச்சி அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் தாய், தங்கை மற்றும் குழந்தை உள்பட 4 பேர் சென்ற நிலையில், திடீரென வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் அனைவருமே உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கரந்தையைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அலங்காரி என்ற சரஸ்வதி. இவர்களுடைய 30 வயது மகன் இசக்கிராஜ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர்களுடைய உறவுக்கார குழந்தைக்கு நேற்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் காதணி அணியும் விழா நடைபெற்றது.

இதனால் இசக்கிராஜ் தன்னுடைய தாயார் சரஸ்வதி, தங்கை கார்த்திகா (25), இவருடைய மகன் சந்துரு (2) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காரையாறுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அம்பை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அம்பை அருகே கோடாரங்குளம் விலக்கு அருகில் வந்தபோது, அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் இசக்கிராஜ் குடும்பத்தினர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த சரஸ்வதி, கார்த்திகா, குழந்தை சந்துரு ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இசக்கிராஜ் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் லாரியானது சாலையின் வலதுபுறம் பாய்ந்து சாலையோர எச்சரிக்கை பலகை கம்பியில் மோதி நின்றது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். படுகாயமடைந்த இசக்கிராஜை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் இசக்கிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் அவரது அம்மா, தங்கை, தங்கையின் மகள் என நான்கு பேரும் பலியாகி உள்ளனர்.
ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் தான் செல்ல வேண்டும். ஆனால் 4 பேர் சென்றதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்திற்கு காரணம் டிப்பர் லாரி டிரைவர் தான் என்று கூறப்படுகிறது.. வேகமாக வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications