எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை.. துணை நடிகர் வைத்த சர்ச்சை போர்டு
நெல்லை: நெல்லையில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவர்களுக்கு வீடு வாடகைக்கு அணுக வேண்டாம் என துணை நடிகர் ஒருவர் போர்டு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு வாடகைக்கு கேட்கும் பலருக்கு தெரியும், அது எத்தனை கடினமான வேலை என்பது! வீடு வாடகைக்கு போய் கேட்டால் திருமணமாகிவிட்டதா, ஆம் என்றால் எத்தனை குழந்தைகள், எங்கே பணியாற்றுகிறீர்கள். மாதம் எவ்வளவு சம்பளம், எந்த தேதியில் சம்பளம் கிடைக்கும் என கேட்பார்கள்.
திருமணமாகவில்லை என்றால் வீடு இல்லை என சொல்லிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இன்னிக்கு நீங்கள் தங்கிட்டு நாளை உங்கள் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டு வரக் கூடாது என கண்டிஷன்களை அடுக்குவர். குடும்பஸ்தராக இருந்தால் கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்கு மட்டுமே வீடு என்பார்கள்.

கணவரின் தாய்
கணவரின் தாய், தந்தையோ, மனைவியின் தாய் தந்தைக்கோ இடமில்லை. கைக் குழந்தைகளுக்கு வீடு கொடுக்க மாட்டேன் என்பார்கள். விருந்தாளிகள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திரும்பி சென்று விட வேண்டும் என்றெல்லாம் மனசாட்சியே இல்லாமல் பேசுவார்கள். கைக் குழந்தை இருந்தால் அடிக்கடி அழும், இதனால் தூக்கம் கெடும், குழந்தை அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் அந்த துணியை துவைக்க தண்ணீர் அதிகமாக செலவிடுவார்கள் என்பதால் இந்த கண்டிஷன்.

வாடகைக்கு வீடு
மாதாமாதம் வாடகை டான்னு 1ஆம் தேதியே வந்துடணும், கரண்ட் பில் யூனிட்டுக்கு 6 ரூபாய் இல்லாட்டி 7 ரூபாய். வடமாநிலத்தவருக்கு வீடு இல்லை, கூலித் தொழிலாளர்களுக்கு வீடு இல்லை, இந்த சமூகம், இந்த மதத்தினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும். இந்த உணவு பழக்கத்தினருக்கு வீடு கிடையாது என்பதெல்லாம் பார்த்ததுண்டு. ஐடி கம்பெனியில் வேலை செய்தால் மட்டுமே வேலை என்கிற காலமும் உள்ளது. சினிமா, சீரியலில் நடிப்போருக்கு வீடு இல்லை. இதனால் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்கள் ஹோட்டல் விடுதியில் தங்கும் நிலை ஏற்பட்டது.

சீவலப்பேரி
ஆனால் நெல்லை சீவலப்பேரியில் துணை நடிகர் ஒருவர் தனது வீட்டின் வாசலில் வித்தியாசமான போர்டை வைத்துள்ளார். அதில் வீடு வாடகைக்கு என போட்டுவிட்டு குடிகாரர், வடமாநிலத்தவர் எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். மாரி, எந்திரன், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருப்பவர் ஐசக் பாண்டியன். இவருக்கு பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் சொந்த வீடு இருக்கிறது.

வாடகைக்கு வீடு
இந்த வீட்டின் மாடிப்பகுதியை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் வைத்திருக்கும் போர்டில்தான் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஐசக் பாண்டியன் கூறுகையில் குடிப்பழக்கம்தான் இந்த சமூகத்தை சீரழிக்கிறது. இதனால்தான் குடிகாரர்களுக்கு வீடு கொடுக்க நான் விரும்பவில்லை. அது போல் வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் நம் மாநிலத்திற்கு வந்துவிட்டதால் கலாசாரமும் பண்பாடும் கெட்டு போகிறது.

மதுவை ஒழிக்கணும்
அது போல் தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அவர் கோட்டைவிட்டுவிட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில் மதுவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கொடுக்க விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications