ஈரோடு கிழக்கில் பாஜக உடன் கூட்டணி..லோக்சபா தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு..சொல்வது இபிஎஸ்
அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலி: அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது.அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. லோக்சபா தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் செயல்படுகளை கடுமையாக தாக்கி பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;பயிர் இழப்பீடு விவகாரத்தில் திமுக, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது என்று கூறினார். அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி தொடரும் என்றார்.
திமுக கூட்டணியால் திமுக மட்டுமே வளர்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தேய்ந்து கொண்டு உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டனர். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும்.
கடந்த 21 மாதங்களாக திமுக ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கவில்லை. சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, ரவுடிகளின் அட்டூழியம் அதிக அளவில் அதிகரித்து உள்ளது. பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் இளைஞர்களிடத்தில் அதிகரித்துள்ளது. காவல்துறை வாகனத்தை திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கொட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications