உதயநிதி ஸ்டாலினால் ஒருநாளும் முதல்வராக வர முடியாது.. நெல்லையில் கொந்தளித்த அமித்ஷா
நெல்லை: உதயநிதி ஸ்டாலின் ஒருநாளும் தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஒரே லட்சியம் தனது மகன் உதயநிதியை முதல்வராக்குவது தான் என்று கூறிய அவர், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பாஜக இம்முறை தென் மாவட்டங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பேசுகையில், தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும். பாஜக - அதிமுக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இந்த கூட்டணி தமிழக மக்களின் நிலையை மேம்படுத்தும். இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி இங்கு நடக்கும் திமுகவின் ஆட்சிதான்.
மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்க வேண்டுமா? 130வது சட்டத்திருத்தத்தை கறுப்பு சட்டம் என்கிறார் ஸ்டாலின்.
அதனை சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஸ்டாலின் கறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை அறிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஒரே லட்சியம் தான். சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.
அதேபோல் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதே கனவு. இந்த இரு கனவும் பலிக்காது. ஒருநாளும் உதயநிதி ஸ்டாலினால் தமிழக முதல்வராக வர முடியாது என்று தெரிவித்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 18 சதவிகித வாக்குகளையும், அதிமுக கூட்டணி 21 சதவிகித வாக்குகளையும் பெற்றது.
இதன் மூலமாக சட்டசபைத் தேர்தலில் எளிதாக அதிமுக - பாஜக கூட்டணி 39 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடும். இந்த வாக்குகளை இணைத்தாலே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்துவிடும். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications