தென்காசி அருகே ஒரு "கீழடி..?" பாதைக்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த 2 ஆயிரம் ஆண்டு பழங்கால பொருட்கள்
நெல்லை: தென்காசி அருகே பாதைக்காக தோண்டிய போது பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் அருகே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த பொருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நடைபெற்ற இந்தச் சாலை அமைக்கும் பணிக்காக மண் எடுக்கப்பட்டது. அப்போது சுமார் நான்கு அடி ஆழத்தில் உருளைக் கற்கள் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், மீண்டும் மண் எடுக்கும் பணியைக் கவனமாக மேற்கொண்டனர்.

ஆயுதங்கள்
அப்போது, பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப்பட்ட, வில், குத்தீட்டி, வாள், கத்தி, செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் என ஏராளமான பொருள்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்துமே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுவதாக குற்றாலம் தொல்லியல் துறை அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அனைத்துப் பொருட்களும் வேலை நுணுக்கம் மிக்கவையாக உள்ளன.

நாகரீக வாழ்க்கை
இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நாகரிக வாழ்க்கை துல்லியமாக வெளிப்படுகிறது. பொக்லைன் மூலம் தோண்டினால் பொருட்கள் சேதமடையும் என்பதால், இந்த இடத்தில் தோண்ட வேண்டாம் என்று கூறியுள்ளோம். அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றும் அவர் கூறினார்.

வரலாற்று தகவல்கள்
குறைந்த பரப்பளவில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இங்கு விரிவாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கீழடி அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தமிழர்களின் தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் நடைபெறும் ஆய்விலும், தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தென்காசி மாவட்டத்தில் கிடைத்துள்ள இந்த பொருட்களை ஆதாரமாக வைத்து, அகழாராய்ச்சி, நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications