பல் பிடுங்கிய வழக்கு.. போலீசார் வெளியேற்றம்..நள்ளிரவு வரை நீடித்த பரபர விசாரணை.. இன்றும் நடக்கிறது
நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 11 பேரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் இந்த விசாரணையை நேற்று காலை 10 மணியளவில் உயர்மட்ட அதிகாரி அமுதா தொடங்கினார். இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காவல் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பல்வீர் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் என பல தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா கடந்த 10 ஆம் தேதி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் 2-வது கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் இந்த விசாரணையை நேற்று காலை 10 மணியளவில் உயர்மட்ட அதிகாரி அமுதா தொடங்கினார். விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிரான புகார்களையே முன் வைக்க வருவதால், தாலுகா அலுவலகத்தில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் வெளியேறுமாறு வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதானால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வெளியேறிய பிறகே அதிகாரி அமுதா தனது விசாரணையை தொடங்கினார். பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரணை நீடித்தது.
இதனால் நேற்று அம்பை தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மீதம் உள்ள பாதிக்கப்பட்ட நபர்கள் 3 பேரிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்று விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் அதிகாரி பல்வீர் சிங் மீது நேற்று 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications