2026ல் அதிமுக - பாஜக சேருதா? ஒருபக்கம் உக்கிர மோதல்.. ஆனா நயினார் நாகேந்திரன் என்ன இப்படி சொல்றாரு?
நெல்லை: அதிமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இரு கட்சிகளின் தலைவர்களும் எதிர் தரப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில் 2026 தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று பாஜக சட்ட மன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அப்போது அதிமுக 1 தொகுதியில் வென்றது. தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், அதிமுக 66 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வென்றன. கடந்த ஆண்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

அதிமுக - பாஜக மோதல்: இதையடுத்து 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணியாகப் போட்டியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி நிலவி வருகிறது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை தாக்கிப் பேசி வந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தற்குறி, கிணற்றுத் தவளை, கொலை வழக்கில் பதுங்கி இருந்தவர் என பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து, அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துப் பேசினர்.
நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தை: இதனால், 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதேசமயம், பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 2026 தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி." எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சைக்கிள்: மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், "மேற்கு வங்கத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதற்காக போர்க்கொடி தூக்கினர். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். சட்டம ஒழுங்கு சரியாக இல்லை. எல்லா பள்ளிகளின் வாசலிலும் கஞ்சா விற்கின்றனர். முதல்வர் சைக்கிள் ஓட்டுவதை குறையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
விஜய் அரசியல் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது குறித்த கேள்விக்கு, எந்த கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கென்று ஒரு சுதந்திரம் உள்ளது. கட்சி மாநாடு நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். ஒரு வேளை ஆளுங்கட்சி விஜய்யை பார்த்து பயப்படலாம் எனத் தெரிவித்தார்.
சீனி சக்கரை சித்தப்பா: மேலும், தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வளர்கிறதா? என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியில் திட்டங்களை விட விளம்பரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என பதில் அளித்தார் நயினார் நாகேந்திரன். தொடர்ந்து, முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளது குறித்த கேள்விக்கு, "சீனி சக்கரை சித்தப்பா ஏட்டுல எழுதி நக்கப்பா" என சிரித்தபடியே பதில் அளித்தார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications