அதிமுக அப்பவே அப்படித்தான்.. ஒரே பதவி சண்டை.. அதான் பாஜக வந்தேன்.. நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்
நெல்லை : பதவி சண்டை தலைதூக்கியதால்தான் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்றதாக அக்கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
Recommended Video
இராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லை சட்டமன்ற தொகுதியில் அமைச்சராக இருந்த காலத்தில், பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை, இராமயம்பட்டி பகுதியில் கால்நடை கல்லூரி போன்றவை கொண்டுவரப்பட்டன. நெல்லை சட்டமன்றத் தொகுதி மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகவில் இருதரப்பு சண்டை நடந்து வந்ததால்தான் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதிமுக கோஷ்டி பூசல் விவகாரத்தில் பாஜக வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் யாருக்கும் சாதகமாக பாஜக இல்லை; நடுநிலையாக செயல்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது.
திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சியே எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவை இல்லை, ஒருவர் எதிர்ப்பு இருந்தாலும் எதிர்ப்பு தான். அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நல்லதாக இருக்கும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.
மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலையில் தட்டிய விவகாரத்தில் அமைச்சர் இயல்பாக நடந்து கொண்டார்; அதனைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.