அகஸ்திய மலை யானைகள் சரணாலயமாக அறிவிப்பு.. யானைகள் தினத்தன்று வந்த மாஸ் அறிவிப்பு! ஏன் முக்கியம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப் பகுதியை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சர்வதேச அளவில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகளாக யானைகளும் இருந்து வருகிறது. தந்தங்களுக்காக யானைகள் அதிகம் வேட்டையாடப்படுகிறது.
இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக யானைகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்தே வருகிறது

யானைகள்
யானைகளுக்குத் தனியாகக் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டு யானைகள் வாழ்விடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது ஒட்டுமொத்தமாக உலகில் இருக்கும் ஆசிய யானைகளில் சுமார் 40% இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அகஸ்திய மலை
காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நீலகிரி, நீலாம்பூர், தேனி, ஆனைமலை என மொத்தம் நான்கு யானைகள் காப்பகம் உள்ளன. இதற்கிடையே நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப் பகுதியை யானைகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

2500 யானைகள்
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் அகஸ்திய மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 2500க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது உறுதியானது. மேலும், அகஸ்திய மலையைச் சுற்றியுள்ள பகுதிகளும் கூட காட்டுப் பகுதியாகவே உள்ளன. இதனால் இந்தப் பகுதியை யானைகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

யானைகள் சரணாலயம்
இந்தச் சூழலில் நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப் பகுதியை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அகஸ்திய மலையில் 1,1947 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காடுகளின் காவலனாகக் கருதப்படும் யானைகளைப் பறைசாற்றும் வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய வனத்துறை அமைச்சர் புபேந்திர யாதவ் இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications