‘இது அம்மா அப்பா பாடும் தாலாட்டு...’ மகனுக்காக தனி தாலாட்டு பாடல்கள் வெளியிட்ட நெல்லை பெற்றோர்!
மகனுக்காக நெல்லை இளைஞர் தாலாட்டு ஆல்பம் வெளியிட்டுள்ளார்.
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த ஒரு பெற்றோர் வித்தியாசமான முயற்சியாக தங்களது மகனுக்காக தாங்களே எழுதி, பாடி தாலாட்டுப் பாடல்கள் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நெல்லை எப்.எம். ஒன்றில் ஆர்.ஜே.வாக பணி புரிந்து வருபவர் வெங்கட்ராமன். எதையுமே புதுமையாக, வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இவர், எம்.ஏ. படித்தவர். சினிமா, தொலைக்காட்சி, ரேடியோ என ஊடகத்தின் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வரும் இவர், சமுதாயப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.
மற்றவர்கள் சிந்திப்பதில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட இவர், தனது திருமணத்திற்கான அழைப்பிதழைக் கூட வீடியோவாக தயார் செய்திருந்தார். அதில் மற்றொரு புதுமை என்னவென்றால், அவரே தன் சொந்தக்குரலில் பாடல் ஒன்றைப் பாடி தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இவரது மனைவி கஸ்தூரியும் ஊடகப் பணியில் ஆர்வம் கொண்டவர் தான். தற்போது இந்தத் தம்பதிக்கு வியன் என்ற மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தைக்காக வெங்கட்ராமனும், அவரது மனைவி கஸ்தூரியும் சேர்ந்து தாலாட்டுப் பாடல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எப்படி இந்த எண்ணம் உதித்தது என்று இதோ அவரே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..
பாட்டு பிடிக்கும்..
"எனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே பாட்டுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல பாட்டு முறையா கொஞ்ச நாள் கத்துக்கிட்டேன். அப்புறம் ஸ்கூல் காலேஜ் ல ரெண்டு பாட்டு போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கினேன். அவ்ளோ தான் பாட்டுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. மற்றபடி தினம் தினம் பண்பலை பணி காரணமாக அதிகம் பாடல்கள் கேட்பது இசை பாடல்களின் மீது இருக்கும் ஆர்வத்தை வளர்த்து கொண்டே இருந்தது.
டிஜிட்டல் இன்விடேஷன்:
என் கல்யாணத்துக்கு கூட டிஜிட்டல் இன்விடேஷன் ஆ நானே பாடி ட்யூன் பண்ணி ஆக்ட் பண்ணின ஒரு டிவிடி இன்விடேஷன் தான் கொடுத்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் வீட்ல ஒரு தாய் அவங்க குழந்தைக்கு தாலாட்டுங்கிற பெயரில ஒரு இரண்டு வரியை திரும்ப திரும்ப பாடிகிட்டே இருக்கிறதை கேட்டேன். அப்போ தோணின விஷயம் தான் இந்த தாலாட்டு பாட்டு ஆல்பம் ஐடியா.
பாடலும் ஒரு அங்கம்:
நம்ம தமிழ் கலாச்சாரத்துல பிறப்பு முதல் நிறைவு வரை எல்லா சடங்கு சம்பரதாயத்துலையும் பாடல் ஒரு அங்கமா இருந்துகிட்டே தான் இருந்தது. இப்போ ஒரு 30 ,40 வருஷமா தான் யாரும் எந்த நிகழ்ச்சியிலும் பாடுறது இல்ல. வீட்டு நிகழ்ச்சிகள்ல பாடுறதுக்கு தனி கச்சேரி டீம் ஐ புக் பண்ணிறாங்க. அதோட இப்பல்லாம் நாம ரியாலிட்டி ஷோ ல பாடல்கள் பாடுறவங்களை பார்த்து பிரமிச்சு வியந்து பேசிக்கிட்டே பாடல்கள் பாடுறதை நம்ம வாழ்க்கையில இருந்து தள்ளி வச்சுட்டோம்.ஒரு சிலர் ஸ்முல் மாதிரி சில ஆப்ல பாடி ட்ரை பண்றாங்க. மத்தபடி பாடுறது குறைஞ்சு போச்சு.
ஆல்பத்திற்கான விதை:
அதனால் ஏன் நாம நம்ம குழந்தைக்காக ஒரு பாடல் பண்ண கூடாதுனு ஆசைப்பட்டு என் மனைவிகிட்ட சொல்ல அவங்களுக்கும் பிடிச்சு போச்சு அந்த ஐடியா. நான் முதல் பாட்டை எழுதி என் மனைவி கஸ்தூரி கிட்ட காட்டின போது அவங்க 4 மாசம் கர்ப்பமா இருந்தாங்க, ஒரு பாட்டு ரெண்டாகி மூணாகி அப்புறம் அவங்க நானும் ஒண்ணு எழுதுறேன்னு சொல்லி 4 பாட்டாகிடுச்சு. இதுல ரெண்டு பாட்டு சோலோ வா நாங்க பாடியிருக்கோம், ரெண்டு பாட்டை சேர்ந்து பாடியிருக்கோம்.
ரெக்கார்டிங்:
மூணு பாட்டு தாலாட்டுங்கிற ஜானர்ல மெலடியா இருக்கும். அடுத்து 4 வது பண்ணின போல்க் ஒரு கொண்டாட்ட மூட்ல பண்ணியிருக்கோம். இந்த பாடல்கள் எல்லாம் ரெக்கார்டிங் பண்ணும் போது கூட என் மனைவி உடல்நிலை காரணமா பெட்ரெஸ்ட்ல இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால வீட்டுலயே ரெக்கார்டிங் தியேட்டர் செட்டப்பை உருவாக்கி ரெக்கார்டிங் பண்ணினாங்க.
உதவி:
எங்களோட இந்த முயற்சிக்கு எங்க நண்பர் ஜோசுவா ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாரு. அவர்தான் இந்த ஆல்பத்துக்கு மியூசிக் பண்ணி இருக்காரு. நாங்கள் தொழில்முறை பாடகர்கள் இல்லை. ஜோசுவாவும், பிரெடியும் தான் பொறுமையாக எங்ககிட்ட வேலை வாங்கி இந்தப் பாடல்களை உருவாக்கினாங்க. போஸ்ட் புரொடக்சன் வேலைகள்ல சுவாமிங்கற நண்பரும், வீடியோவுக்கு இமானும் ரொம்ப உதவினாங்க. எங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழா அன்று august 25 ஆம் தேதி நாங்கள் இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்தோம்..
இது தான் காரணம்:
பொதுவா இன்னைக்கு குழந்தைங்களோட பெற்றோர்களும் பேசி பழகுற டைம் ரொம்ப குறைவா இருக்கும். இந்த மாதிரி பாடல்கள் அதுல சொல்ற நீதிக் கருத்துக்கள் குழந்தைகள் அறியா வயசுலையே கேட்க ஆரம்பிக்கும் போது, பெற்றோர் குழந்தைங்க இடையுல ஒரு நல்ல பாண்டிங் கிரியேட் ஆகும். அது எதிர்காலத்துல ஒரு நல்ல மனிதனா அந்த குழந்தை வளர உதவியா இருக்கும் னு அந்த ஆசையில் தான் இந்த தாலாட்டு பாட்டு ஆல்பம் ரிலீஸ் பண்ணியிருக்கோம்.
முயற்சிகள் தொடரும்:
தொடர்ந்து எங்க பையன் வியன் (தூய தமிழ் பெயர் இந்த பெயருக்கு வியந்து பார்க்க கூடிய பெருமைமிகு னு அர்த்தம் ) வளர வளர அவனோட சேர்ந்து இன்னும் வேற வேற தருணங்கள்ல பல பாடல்களை தொகுப்பா பண்ணனும்னு பண்ணியிருக்கோம். இதெல்லாம் கேட்டுட்டு ரசிச்சுட்டு போயிடாம நீங்களும் உங்க குழந்தைகளுக்காக , குழந்தைகளோடு சேர்ந்து இது மாதிரி ஆல்பம் முயற்சிகளை செஞ்சு பாடல் வெளியிடனும் அதான் எங்களோட ஆசை" என்கிறார் வெங்கட்ராமன்.