"இதுவே முதல்முறை" பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம்.. குற்றவாளிகள் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை!
நெல்லை: பாஞ்சாங்குளம் தீண்டாமை வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் 6 மாதத்திற்கு ஊருக்குள் வருவதற்கு தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளத்தில் உள்ள கடைக்கு வந்த பள்ளிக் குழந்தைகளிடம் கடைக்காரர், "இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. தின்பண்டம் கொடுக்க முடியது என்று சொல்கிறார்கள் என வீட்டிலும் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டோம். ஊரில் கட்டுப்பாடு வந்துள்ளது" என்று சொல்கிறார்.

ஊர்க் கட்டுப்பாடு
இதனை கேட்ட அந்த பிஞ்சு குழந்தை, என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறது. அதற்கு கடைக்காரர் உடனே, "கட்டுப்பாடு என்றால் ஊரில் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். உங்கத் தெருவில் யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாது" என்று கூறி அந்தக் குழந்தைகளை கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

5 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாமை என கூறப்படும் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்த குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். மீதமுள்ள இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறப்புப் பிரிவின் கீழ் வழக்கு
இந்த நிலையில் தீண்டாமை விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு பிரிவாக சாதிய பாகுபாட்டில் ஈடுபட்ட நபர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் சிறப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதுவே முதல்முறை
அப்போது பாஞ்சாங்குளம் தீண்டாமை குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications