ரஜினி கட்சி தொடங்கமாட்டார்... அவரை ரசிகர்கள் கைவிட்டுவிட்டனர் -முத்தரசன்
நெல்லை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் கட்சி ஆரம்பிக்கவேமாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், தனது படம் தொடர்பான விழாக்களில் மட்டும் ரஜினி அரசியல் பேசுவது வாடிக்கையாகிவிட்டதாக முத்தரசன் விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்களே கைவிட்டுவிட்டார்கள் என்றும், இதனால் ரஜினி கட்சி தொடங்குவது சாத்தியமல்ல எனவும் கூறியுள்ளார். வருமான வரி விவகாரத்தை திசைதிருப்பவே திடீரென்று செய்தியாளர்களை சந்தித்து, குடியுரிமை சட்டம் தொடர்பாக ரஜினி பேட்டி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவாரா மாட்டாரா என விவாதங்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் முத்தரசன் கூறிய இந்த கருத்து கவனிக்கத்தக்கது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் போன்றோர் கூறும் நிலையில் அதனை மறுக்கும் வகையில் முத்தரசன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு விவரமும் தெரியாதவர் ரஜினிகாந்த் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பாண்டியன் விமர்சித்திருந்த நிலையில், முத்தரசனும் கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார். இதுவரை ரஜினிகாந்துக்கு எதிராக பெரியளவில் கருத்துக்கூறாத கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது ரஜினியை எதிர்க்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஏப்ரலில் ரஜினி கட்சி தொடங்கி ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார் என அவரது ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மனியன் பேட்டி அளித்துள்ள நிலையில், அது தொடர்பான விவாதங்கள் அரசியல் களத்தில் நடைபெற்று வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள், என பலமுனைகளில் இருந்து செல்லும் தாக்குதலை ரஜினி எவ்வாறு எதிர்கொள்வார், இவர்களை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications