மெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: முன்னாள் அமைச்சரும், பாஜக மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரனை இழுக்க திமுக, அதிமுக ஆகிய இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக கட்சியில் முக்கியப் பதவி உட்பட இன்னும் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு மெகா ஆஃபர்கள் அள்ளிவீசப்பட்டுள்ளன.
ஆனால் ஒவ்வொரு நகர்வையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து வைக்கும் நயினார் நாகேந்திரன், இது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடையே ஆலோசித்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்து ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் பாஜக ஏன் கோர்ட்டுக்கு போகவில்லை? ஆ. ராசா சுளீர் கேள்வி
நயினார் நாகேந்திரன்
நெல்லை மாவட்ட அதிமுகவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நயினார் நாகேந்திரன். பணகுடி பகுதியை சேர்ந்த இவரை அப்பகுதி மக்கள் பண்ணையார் என்ற அடைமொழியில் அழைக்கிறார்கள். காரணம் அந்தளவிற்கு அவரிடம் விளை நிலங்கள் பரந்துவிரிந்து இருக்கிறது. அரசியலில் அதிமுக பணகுடி நகரச் செயலாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர், அமைச்சர் என உயர் பொறுப்புகளை வகித்து தற்போது பாஜகவில் உள்ளார்.
உட்கட்சிப் பூசல்
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் எழுந்த உட்கட்சி பிரச்சனைகளால் நயினார் நாகேந்திரன் கடும் அப்செட்டில் இருந்தார். உள்ளூர் அரசியலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவரை கட்சி மாறும் முடிவுக்கு தள்ளியது. இதையறிந்த அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக பேசி அவரை பாஜகவில் இணைத்து அமித்ஷாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்.
துணை தலைவர்
இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்த நயினார் நாகேந்திரன் இதற்காக பல மாதங்கள் டெல்லியில் தவம் இருந்தார். ஆனால் காற்று எல்.முருகன் பக்கம் வீசியது. இதனால் சைலண்டு மோடுக்கு சென்ற அவர் சில காலம் கட்சிப்பணிகளில் வேகத்தை குறைத்தார். இதனிடையே அண்மையில் வெளியாகிய நிர்வாகிகள் பட்டியலில் தனக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நயினாருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. மாநில துணை தலைவர் என்ற பதவியை பார்த்து பத்தோடு பதினொன்றா நான் என குமுறி தனது அதிருப்தியை ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக முயற்சி
இதனை அறிந்த திமுக தலைமை நயினாரை திமுகவுக்கு அழைத்துவந்தால் என்ன என யோசித்தது. இதற்கான அசைன்மெண்ட் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஆவுடையப்பன் ஆகியோருக்கு தரப்பட்டது. அவர்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிக் கொண்டிருந்தபோதே எல்.முருகன் நெல்லைக்கு விசிட் அடித்து அதற்கு பிரேக் போட்டார். இதேபோல் தாய் கழகமான அதிமுகவில் இருந்தும் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆஃபர்களும் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன.
கதவை மூடிய நயினார்
இப்படி அரசியல் நகர்வுகள் தன்னை சுற்றி நடைபெற்று வரும் நிலையில், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு கதவை மூடிவிட்டார் நயினார் நாகேந்திரன். இதன் மூலம் திமுக, அதிமுகவுக்கு இடம்பெயரும் திட்டம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை என்பதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் நயினார் நாகேந்திரன். இதனிடையே நயினார் நகேந்திரனை தக்க வைக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மேற்கொண்ட சமாதான படலம் கைகொடுத்துள்ளது.