முன்னாள் மேயருக்காக உயிரை விட்ட பணிப் பெண் மரியம்மாள்.. ஆதரவில்லாமல் நிர்கதியான 3 மகள்கள்
நெல்லை: திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை காப்பற்ற முயன்று அவரது பணிப்பெண்ணான விதவைப்பெண் உயிரை விட்டார். இதனால் அவரது 3 பெண் குழந்தைகளும் தாய் தந்தை என இருவரையும் இழந்து ஆதரவில்லாமல் தவித்து வருகின்றன.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வந்தார். 23 ந்தேதி மதியம் கணவர் முருகு சந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
மூவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பணிப்பெண் சாவால் துயரம்
இதில் சந்தேகத்தின் அடிப்பாடையில் 4ஆண்கள்,3 பெண்கள் என 7பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

தன் 3 குழந்தைகளுக்காக
வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8,10,12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே கணவரை பறிகொடுத்த நிலையில் மாரியம்மாள் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓய்வின்றி பல வீடுகளின் பணிப்பெண்ணாக உழைத்ததாகவும், தான் படிக்காத படிப்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்பியதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

நிற்கதியாக 3 குழந்தைகள்
மூன்று பெண் பிள்ளைகளின் கல்விக்காக உழைத்துக்கொண்டே இருந்த மாரியம்மாள் 3பெண் பிள்ளைகளையும் நிர்கதியாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பெண் பிள்ளைகள் தங்களுடைய தாயும் இறந்துவிட்ட நிலையில் எதிர்காலம் குறித்த பல கேள்விகளுடன் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரசு பணி வழங்க
மகளை இழந்த சோகத்தில் நிற்கதியாய் இருக்கிறார் மாரியம்மாளின் வயதான தாய். மாரியம்மாளின் குடும்பமே இன்று தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கல்வியில் சிறந்து விளங்கும் 3 பெண் குழந்தைகளுக்கும் தமிழக அரசு உதவி செய்து மேற்கொண்டு படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவர்களுக்கு குடியிருக்க ஒரு வீடு வழங்கி அந்த 3 பெண்பிள்ளைகளையும் அரசு உதவி செய்து கல்வி செலவையேற்று அவர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கி நிர்கதியாக நிற்கும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், மாரியம்மாளின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications