100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 300 நாட்களாக உயர்த்த வேண்டும்: சீமானுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி
திருநெல்வேலி: தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 300 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன; அதனால் 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து.
சீமானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மன்னிப்பு கேள் சீமான் என்ற ஹேஷ்டேக், சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது.

தேர்தலில் அமைச்சர்கள் முகாம்
இந்நிலையில் திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒன்பது விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நியாயமன்றி நடைபெறும் என பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் நிலவி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். இப்படி அமைச்சர்களே ஒவ்வொரு மாவட்டங்களில் முகாமிட்டிருந்தால் அவருக்குக் கீழே பணியாற்றும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆகவே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக செல்கிறார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விதிமுறை மீறல்களும் பணப்பட்டுவாடாவும் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக தேர்தல் ஆணையத்தின் மூலம் எந்த பலனும் இல்லை.

300 நாட்களாக உயர்த்த வேண்டும்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 முதல் 200 வரை திமுகவினர் குறைவாக வாக்கு வாங்கினால் அவர்களை அதிகாரிகள் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என மாநில அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனைப் பார்க்கும்போது தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடக்காது என தெரிகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பதை 300 நாட்களாக ஆக உயர்த்த வேண்டும். இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலையில் உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். ராம்குமார் உயிரிழந்தது தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும்.

தேவை இந்திய உணர்வு
பள்ளிகளில் ஜாதிய மோதல் அதிகரித்து உள்ளது. சமூக நீதியைப் பற்றி பேசும் அரசியல் கட்சியினர் இந்திய உணர்வு பற்றிப் பேசவேண்டும். இந்திய உணர்வை மாணவர்கள் மத்தியில் வெளிக்கொண்டுவர பாடுபட வேண்டும். ஜாதிய கல்வியை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது. தேசப்பற்று குறைந்து கொண்டே வருகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்து உள்ளது. ஆனால் 205 வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து வருகிறது. அப்படி என்றால் ஆறு மாதத்தில் 505 வாக்குறுதிகள் நிறைவேற்றுவார்களா? நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், முதியவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உயர்த்தப்படும் என தெரிவித்த அனைத்துமே திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. இதிலிருந்தே அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன என்பது தெளிவாக தெரிய வருகிறது.

சமூக நீதி என்ன விலை?
ருத்ர தாண்டவம் படத்தில் வரும் போதை மருந்துக்கு எதிரான விசயங்கள் எனது கொள்கைகளை ஒத்து உள்ளது. அதுபோல் வன்கொடுமை சட்டத்தில் யார் மீதும் இதுவரை நானும் எனது கட்சி சார்பில் யாரும் வழக்கு பதிவு செய்ததில்லை. இனிமேலும் பதிவு செய்யக் கூடாது என்பதுமே எனது கொள்கையாக உள்ளது. தமிழகத்தில் சமூக நீதி என்ன விலை என்பது கேட்கக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications