சாலையில் தேங்கிய மழைநீரால் கவிழ்ந்த கார்! நெல்லையில் 3 பேர் பலி.. திருமண வீட்டில் பெரும் சோகம்
திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் திருநெல்வேலி அருகே சாலையில் தேங்கிய தண்ணீரால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது.
திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாங்குநேரி அருகே முதலைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு நேற்று திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் மணமகளின் சொந்தஊரான ராமையன்பட்டியில் நடந்தது.

இதையடுத்து மாலையில் திருமண தம்பதியை முதலைகுளத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். அதன்பிறகு மணப்பெண்ணின் குடும்பத்தினர் ராமையன்பட்டிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி அருகே 4 வழிச்சாலைகளில் கார் வந்து கொண்டிருந்தது. பேரின்பபுரம் விலக்கில் சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்கீழாக கவிழ்ந்தது. மேலும் சாலை முழுவதும் ஈரமாக இருந்ததால் கவிழ்ந்த கார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.

இதையடுத்து காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து பின்னால் இன்னொரு காரில் வந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தின் உள்பட அனைவரும் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த சாமித்துரை மற்றும் பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் காரில் பயணம் செய்த கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்திரகாளி, சாம்சன்பிரபு, லட்சுமணன், மற்றொரு முத்துக்குமார், மற்றொரு கண்ணன் ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அப்போது லட்சுமணன் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். மற்ற 7 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications