நாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video
நெல்லை: உதயநிதி ஸ்டாலினை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வைத்து இப்போது ஒரு வேனில் ஏற்றி பிரசாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும், குடும்ப அரசியல் பற்றியே தி.மு.க.வினர் சிந்தித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஏர்வாடி பஜாரில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார்.
திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, திறந்த வேனில் நின்று பொதுமக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

தக்கபாடம்
இந்த தேர்தலை திணித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனிமேல் எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமாவை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும்

எளிமையானவர்
தி.மு.க. கூட்டணியில் மிட்டா, மிராசு, கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். ஆனால், எளிமையானவர் அ.தி.மு.க வேட்பாளர். இன்னும் 1½ ஆண்டு காலம் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்க. காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்தால், உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு வராது.

ஸ்டாலின் மீது தாக்கு
மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிவருகிறார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. பொய்யை திரும்ப திரும்ப கூறினால், உண்மையாகாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வென்றுவிட்டார்கள். வெற்றி பெற்ற பிறகும் எதுவும் செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் மேலேயும் ஆட்சிக்கு வர முடியவில்லை. கீழேயும் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆசையை தூண்டி விட்டு ஜெயித்துவிட்டார்கள்.

குடும்ப அரசியல்
தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று அவரது குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வைத்து இப்போது ஒரு வேனில் ஏற்றி பிரசாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மூத்த தலைவர்கள் எல்லாம் உதயநிதிக்கு கீழ் நிற்கிறார்கள். குடும்ப அரசியல் பற்றியே தி.மு.க.வினர் சிந்தித்து வர்றாங்க. மக்கள் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. ஜனநாயக கட்சி" என்றார்.












Click it and Unblock the Notifications