நள்ளிரவில் பொன்னார் கைது.. திமுக எம்பி ஞானதிரவியம் மீது பாய்ந்த வழக்கு.. நெல்லையில் என்ன நடந்தது?
நெல்லை: பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்ய கோரி நள்ளிரவு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் ஐந்து பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
திமுக எம்பி ஞானதிரவியம் மீது எப்ஐஆர் போடப்பட்டாலும் நாங்கள் கேட்டபடி 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கரை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துச் சென்றதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

நலம் விசாரிப்பு
இதற்கிடையில் எம்பி தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நெல்லையில் தர்ணா
இந்த சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக எம்பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி பொன் ராதாகிருஷ்ணன் திடீரென நேற்று இரவு நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கைது செய்ய கோரிக்கை
அங்கு வந்த காவலர்கள் இதுதொடர்பாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் சட்டப்பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து எம்பியை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்ட பொன்னார்
பின்னர் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டத்தை கைவிடாததால் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சாதி வன்முறை
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ஒரு எம்பி பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இங்கு என்னை போராடக் கூடாது என தெரிவிக்கின்றனர். எப்ஐஆர் போடப்பட்டாலும் நாங்கள் கேட்டபடி 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதி 30 ஆட்களை அழைத்து சென்று அடிக்கிறார். நெல்லையில் சாதி ரீதியாக இதுவரை எத்தனை சம்பவம் நடந்துள்ளது. அதற்கான மீண்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்வாக தான் இதை பார்க்கிறேன். இது ஜனநாயக படுகொலை. என்னை கைது செய்தாலும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

போலீசார் வழக்கு
இதற்கிடையில், பணகுடி காவல் நிலைத்தில் திமுக எம்பி ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தினகரன் ராஜா உள்பட 30 பேர் மீது 147, 294 b, 323, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நேரத்தில் திமுக எம்பி பாஜக வரித்துறை தாக்கிய வழக்கில் திமுக எம்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications