நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு.. புகாரை கண்டுகொள்ளாத உதவி ஆணையர் சஸ்பெண்ட்.. டிஜிபி அதிரடி!
நெல்லை: ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, நெல்லை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நேற்று, ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். சென்னையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஜாகிர் உசேன் நிலத் தகராறில் நேற்று நெல்லை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தௌபிக் (34) என்பவருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சனையில், ஜாகீர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்தபோது தலைமைக் காவலர் ஆனந்த் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு முகமது தௌபிக் என்கிற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன், ஜாகீர் உசேன் முதல்வரின் பார்வைக்கு எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத டவுன் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காததால் நெல்லை டவுன் காவல் முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தலைமை இயக்குநருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் பேரில் காவல் உதவி ஆணையர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு நெல்லை டவுன் சரக காவல் உதவி ஆணையராகப் பணிபுரிந்த செந்தில் குமார், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். முன்பு ஜாகீர் உசேன் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக தற்போது செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் அதிமுக, காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. ஜாகீர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்னிறுத்தப் படுவார்கள்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications