உச்சக்கட்ட பரபரப்பு! நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை.. நடந்தது என்ன? பரபர தகவல்
திருநெல்வேலி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் வசித்து வருபவர் ஜேசுராஜ். இவரது சகோதரர் மரியராஜ், சகோதரி வசந்தா இவர்களும் அதேபகுதியில் வசித்து வருகின்றனர்.
அரசு ஊழியரான வசந்தாவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அழகர்சாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக நில தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அடிதடி
சுமார் 15 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே இந்த நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்குரிய இடத்தில் அழகர்சாமி போர் போட முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த இடத்தில் போர் போடுவதற்காக லாரி வந்து நின்றுள்ளது. அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் கைகலப்பாக ஆரம்பித்த இந்த மோதல் விரைவில் அடிதடியாகவும் மாறியது. ஒரு கட்டத்தில் அரிவாளைக் கொண்டும் தாக்கிக் கொண்டனர்.

சிகிச்சை
இந்த மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த மோதலில் ஜேசுராஜ், அவரது சகோதரர் மரிய ராஜ், சகோதரி வசந்தா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வசந்தாவின் கணவர் ஜேசு உள்படச் சிலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மூன்று பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்,

4 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக நாஞ்சான்குளம் பகுதியிலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications