படிக்க இடமில்லை..விளையாட வசதியில்லை சிறுமி கடிதம்..டக்கென்று நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்
தென்காசி: படிக்க வகுப்பறை கட்டித்தரவேண்டும் என்றும் விளையாட இட வசதி வேண்டும் என்றும் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவி வைத்த கோரிக்கையை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நிதி ஒதுக்கி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று வந்திருந்தார். மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.
இதனிடையே, பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட வினைதீர்த்தநாடார்பட்டி. கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தின் அடியிலும் வராண்டாவிலும், நூலகக் கட்டடத்திலும் அமரும் நிலை இருந்தது.
ஓகே சொன்ன முதல்வர்! சனிப்பெயர்சிக்கு பிறகு வெளியாகும் அறிவிப்பு? ஐ.பெரியசாமிக்கு வருவாய் துறையா?
பள்ளி மாணவி கடிதம்
தங்கள் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் சிரமத்துக்கு உள்ளாவதாக அதே பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சிறுமி ஆராதனா எழுதிய கடிதத்தில், நான் பயிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உள்ள கட்டிடத்தில் இட வசதி இல்லை. விளையாட்டு திடல் இல்லாததால் தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை. எனவே என் அப்பா என்னை வேறு ஊரில் தனியார் பள்ளியில் சேர்க்கப்போவதாக கூறியுள்ளார்.
உதவி செய்யுங்கள்
ஆனால் எனக்கு எங்க ஊரில் உள்ள பள்ளியில் படிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே பள்ளியின் கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும் என்று மாணவி கோரியிருந்தார். போதிய வகுப்பறை கட்டுவதற்குத் தேவையான நிலம் அருகில் இருந்தபோதிலும், அது அறநிலையத்துறைக்குச் சொந்தமானதாக இருப்பதால் அதில் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறு மாணவி ஆராதனா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆராதனாவிற்கு பாராட்டு
முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் மட்டுமே இதைச் செய்து கொடுக்க முடியும் என தனது பெற்றோர் பேசிக் கொண்டதைக் கேட்டதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த அரசு விழாவில் பேசினார். மூன்றாவது படிக்கும் ஆராதனா என்ற குழந்தை எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். குழந்தை எழுதிய அந்தக் கடிதத்தைப் படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பார் என நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.
முதல்வர் அறிவிப்பு
மாணவி ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இப்போது இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு முதல்கட்டமாக, 35.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பள்ளிக்கு இரு வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதால் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணவி ஆராதனா முதல்வருக்கு கடிதம் எழுதியதால் நல்லது நடந்திருப்பதாகக் கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.