அரசு பேருந்தில் சீட்டுக்கு கீழே துப்பாக்கி, அரிவாள்.. நெல்லையில் ‘பகீர்’.. போலீசார் பரபர விசாரணை!
நெல்லை: சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது.

நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் இன்று அரசு விரைவுப் பேருந்தை சுத்தம் செய்யும்போது, படுக்கை சீட்டுக்கு அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில், சீட்டுக்கு அடியில் துப்பாக்கி, அரிவாள் வைத்தது யார், சமூக விரோத செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் அந்த பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்த அந்த சீட்டில் பயணம் செய்தவர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்தில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications