திருச்செந்தூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பல கோடி ரூபாய் நிலம்.. அதிரடி காட்டிய அறநிலையத்துறை
நெல்லை: திருநெல்வேலி அருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டுள்ளது. நெல்லை - திருச்செந்தூர் சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்களுக்கு சொத்துக்களும் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை சமீப காலமாக இதுபோன்ற ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை தயவுதாட்சண்யம் இன்றி அறநிலையத்துறை மீட்டு வருகிறது.

பொதுவாகவே, கோவில் நிலத்திலோ அல்லது நீர்நிலையை ஒட்டிய ஆக்கிரமிப்பு நிலங்களை வாங்கி குடியேறவோ கூடாது. கோவில் நிலங்கள் என்றால் பட்டா பெற முடியாது. எனவே பத்திர பதிவு செய்தாலும் கூட என்றாவது ஒரு நாள் கோவில் நிலம் என்று கூறி அறநிலையத்துறை நிச்சயம் வாங்கிவிடும். இருந்தாலும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் அதை வாங்கி பின்னர் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் என்ற ஊர் உள்ளது. நெல்லை - திருச்செந்தூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊரில், கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலில் கிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானையுடன், தட்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள இந்தக் கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம், திருச்செந்தூர் சாலையையொட்டி இருக்கிறது. திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலை என்பதால், இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது.
இதையடுத்து அதை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் நிலத்தை மீட்டனர். மேலும் நிலத்தை வேறு யாரும் ஆக்கிரமிக்க முடியாதபடி சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. தனியார் ஆக்கிரமித்து இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டதால் கோவில் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications