“அடுத்த டார்கெட் நானா?”.. மர்ம நபர் வீடியோ எடுத்ததாக ஜாகீர் உசேன் மகன் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
நெல்லை: நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி புதிய வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது" என அவர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நிலத் தகராறு காரணமாக கடந்த 18ஆம் தேதி அதிகாலையில் ரம்ஜான் தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஜாகீர் உசேன் உடன் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபிக் மற்றும் அவரது உறவினர்கள் தான் கொலை செய்தது உறுதியானது.

இந்த நிலையில் கொலை நடந்த அன்றே தெளபிக்கின் தம்பி கார்த்திக், தெளபிக் மனைவியான நூர்ஜகானின் தம்பி அக்பர் ஷா இருவரும் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த தெளபிக்கை போலீசார் ரெட்டியார்பட்டி பகுதியில் வைத்து சுட்டுப் பிடித்தனர். நூர்ஜகானை பிடிக்க தனிப்படை திருவனந்தபுரம் விரைந்தது.
இதற்கிடையே ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை டவுன் சரக காவல் உதவி ஆணையர் செந்தில் குமார், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி பரிந்துரை செய்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி புதிய வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று ஹெல்மெட் அணிந்து வந்த நபர் எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அடுத்த டார்கெட் நான் தானா என எண்ண தோன்றுகிறது. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக , ஜாகீர் உசேன் முதல்வரின் பார்வைக்கு எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மகனும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications