"2047" குறிச்சு வச்சுக்கோங்க.. இந்தியா வல்லரசு நாடாக இருக்கும்.. நெல்லையில் எல்.முருகன் பேச்சு!
நெல்லை: 2047ல் இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகத்திற்கு வழிகாட்டியாகவும், வல்லரசாகவும் இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதேபோல், தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் கூறியுள்ளார்.
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் 28வது மாநில மாநாடு நெல்லையில் தொடங்கியது. 2வது நாளான இன்று மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு இளம் சாதனையாளருக்கான விருதை பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.
இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், எந்த பாகுபாடும் இல்லாமல், கட்டமைப்போடு நாம் இருப்பதற்கு ஏபிவிபி அமைப்பு தான் காரணம். இந்த அமைப்பில் இருந்து வந்தவர்கள் இந்தியாவை ஆண்டு வருகிறோம்.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ கொலைகார படைகளை அமைத்தது பிஎஃப்ஐ:என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்தி தெரியாததால் வருத்தம்
1998ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஏபிவிபி தேசிய செயற்குழு கூட்டத்தில் அன்றைய பிரதமர் வாஜ்பாய், தேசிய ஆலோசகர் அப்துல் கலாம், உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் மாணவர்கள் என பாகுபாடு இன்றி பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் ஆற்றிய உரையை இந்தி தெரியாமல் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தி கற்றுக் கொள்ளாததற்கு வருத்தம் அடைந்தேன் என்று தெரிவித்தார்.
ஜி20 மாநாடு
தொடர்ந்து, இந்தியாவில் நடந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை சொல்வதற்கு மட்டும் 8 ஆண்டுகள் வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் பிரதமர் தலைமையில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்கிறது. உலக நாடுகள் நமது தேசத்தை உற்று நோக்குகிறார்கள்.
பொருளாதார முன்னேற்றம்
உலகின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. 8 ஆண்டுகளில் இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு 5வது இடத்திற்கு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி உள்ளது. சுயசார்பு பாரதம் மேக் இன் இந்தியா மூலம் இந்த இடத்தை இந்தியா அடைந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் நமக்கான தேவையை நாமே பூர்த்தி செய்யும் அளவிற்கு பாரதத்தின் மூலம் பல்வேறு தயாரிப்புகள் செய்து வருகிறோம். உலகத்தில் இந்தியாவில் மட்டுமே 80 ஆயிரம் புத்தகத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
2047ல் இந்தியா வல்லரசாகும்
2020ல் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வந்தோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2047ல் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகத்திற்கு வழிகாட்டியாகவும், வல்லரசாகவும் இந்தியா இருக்கும் என்று தெரிவித்தார்.