நெல்லையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இருந்தார். 5 பேர் கொண்ட குழுவினர் சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்தினர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததாகவு, இந்த புகாரின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை சோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது.
முன்னதாக வருமான வரி சோதனை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாலர் அலுவலகத்தில் சோதனை நடப்பது குறித்த தகவல் அறிந்ததும் திமுகவினர் அங்கு திரண்டனர். அவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்காக போலீசும் குவிக்கப்பட்டு இருந்தது.

வாகன சோதனை: தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு: ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணியளவில் ஐடி ரெய்டு நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.
ஆவுடையப்பனிடம் விசாரணை: மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணியளவில் திடீரென அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு முன்னாள் சபாநாயகரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன், மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வருமான வரி அதிகாரிகள் அந்த அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். மேலும் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்எல்ஏ, உள்ளிட்டோரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பணம் கைப்பற்றப்பட்டதா?: தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், இரவு 8.30 மணியளவில் சோதனையை முடித்து விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது செய்தியாளர்கள் வருமான வரி சோதனையில் ஆவணம் அல்லது பணம் கைப்பற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஆவுடையப்பன் பேட்டி: இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், "5 பேர் கொண்ட அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்தினார். ஆனால் இங்கிருந்து எதுவும் கைப்பற்றி செல்லவில்லை" என்று கூறினார்.
பாஜகவுக்கு எதிராக கோஷம்: முன்னதாக திமுக அலுவலகத்தில் ஐடி சோதனை நடந்ததால், அலுவலகம் முன்பு திமுகவினர் குவிந்தனர். அவர்கள் மத்திய பாஜக அரசு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications