பாளை. சிறை மோதலில் கைதி படுகொலை- உறவினர்கள் 8 மணிநேரம் மறியல்- 6 போலீசார் சஸ்பெண்ட்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கைதி முத்துமனோ அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் 8 மணிநேரமாக நடத்தி வந்த சாலைமறியல் போராட்டம் ஆட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த கொலை தொடர்பாக 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்ததாக நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்து மனோ (27), மற்றும் சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர் இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று நான்கு பேருக்கும் கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சிறையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். கைதிகளுக்கான அறைக்கு அனுப்பும் போது சிறையிலிருந்த ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பாளை சிறையில் மோதல்- ஒருவர் பலி
அப்போது இருதரப்பினரிடையே கைகலப்பு பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முத்து மனோ மீது கல்லால் தாக்கியதில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் முத்துமனோ உயிரிழந்தார். சந்திரசேகர், கண்ணன், மாதவன் ஆகியோர் மத்திய சிறை வளாகத்திலேயே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீதிபதி விசாரணை
இதைத்தொடர்ந்து முத்துமனோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த முத்து மனோவின் உடலை நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்று மேஜிஸ்ட்ரேட் பாபு நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சிறைச்சாலையிலும் அவர் விசாரணை நடத்தினார்.

உறவினர்கள் மறியல்
இதனிடையே முத்து மனோவின் உறவினர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்; முத்துமனோ குடும்பத்துக்கு ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். காலை முதல் சிறைச்சாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உறவினர்களுடன் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 8 மணிநேரமாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார் மேலும் உடற்கூறு ஆய்வின் போது அவரது உறவினர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் , சாதிக் கொலை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தோம். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் , நீதிபதி விசாரணை நடப்பதால் அந்த விசாரணை முடிந்த பின்பு சிறைத்துறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் போராட்டத்தை கைவிட்டுள்ளோம் என்றனர்.

6 போலீசார் சஸ்பெண்ட்
இதனிடையே முத்துமனோ கொலை தொடர்பாக 6 போலீசார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறையின் துணை ஜெயிலர் உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications