மகேந்திரகிரியில் ஆக்சிஜன் உற்பத்தி... வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் இஸ்ரோவிடம் கேட்கும் கேரளா
மகேந்திரகிரியில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை, மே மாதம் முதல் வாரம் முதல், வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் கேரளாவிற்கு வழங்கவேண்டும் என இஸ்ரோவிற்கு கோரிக்கை வைத்துள்ளது.
திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலிருந்து ஆக்சிஜன் தர வேண்டும் என இஸ்ரோவுக்கு கேரளா கடிதம் எழுதியுள்ளது. வாரந்தோறும் 10 டன் ஆக்சிஜன் கேரள மாநிலத்தின் ஆக்சிஜன் தேவைக்கு உதவும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மாநில மாநில தலைமைச் செயலாளர் வி.பி ஜாய் இஸ்ரோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் தற்போது வாரந்தோறும் 14 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடிகிறது.

இந்நிலையில், இஸ்ரோ மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என நெல்லை எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் சிவன், மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் அழகுவேல் உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக கொள்ளளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய கலன்கள் இருப்பதால், வாரந்தோறும் 42 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் தங்களுக்கு வாரதிற்கு ஒருமுறை ஆக்சிஜன் தருமாறு இஸ்ரோ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரளாவின் தலைமை செயலாளர் வி.பி ஜாய், இஸ்ரோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோவின் புரோபல்ஷன் வளாகத்திலிருந்து திரவ ஆக்சிஜனை தருவதற்கு இஸ்ரோ எடுத்துள்ள முடிவு கொரோனாவை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு பெரிய அளவில் உதவும் என கூறியுள்ளார்.
கேரளாவில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசு, மாநிலத்திற்குள்ளயே திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றாலும், ஏற்கனவே இருக்கும் திறனை உடனடியாக பெருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இஸ்ரோ மே முதல் வாரம் முதல், வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கேரளாவிற்கு வழங்கவேண்டும் என இஸ்ரோவிற்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications