கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணி - 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
நெல்லை : நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணுமின் நிலையத்திலே எரியூட்டப்பட்ட அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைபதற்கான இந்திய அணுமின் உற்பத்தி கழகம் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் மூலம் நாள்தோறும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்திற்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் சுமார் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் அணு உலைகளில் எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு அணு உலைகளில் மின் உற்பத்தியும் நிறுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைத்து வரும் மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications