சிறப்பு வாக்காளர் திருத்தம்: திமுகவின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள்.. நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் பணியில் மறைமுகமாக அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், அதிகாரிகள் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நெல்லையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.

நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.
பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார்கள்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர். சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துவிட்டனர். 28 லட்சம் பேர் இடம்பெயர்ந்துவிட்டனர். அவர்கள் நீக்கம் தானே செய்யப்படுவார்கள். தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் திமுக வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications