நெல்லை ஜெயக்குமார்..திடீர் ட்விஸ்ட்! கையெழுத்து அவருடையது தானா? மகன்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!
நெல்லை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று இவரது மகன்களான ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் உபரி அருகே கண்டெடுக்கப்பட்டது.

இதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் நெல்லையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் என்பதால் இது தமிழக அளவில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெயக்குமார்: முதலில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனையடுத்து ஜெயக்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தற்போது ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.
கடிதங்களால் பரபரப்பு: மேலும் தனக்கு பணம் தர வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் தனது மருமகனுக்கு எழுதியிருந்தார் இப்படி அடுத்தடுத்து கடிதங்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இவரை காணவில்லை என இவரது மகன்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் குறித்து உடனடியாக விசாரணை செய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.
அடுத்தகட்ட நகர்வுகள்: இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று ஜெயக்குமாரின் மகன்களான ஜெஃப்ரின் மற்றும் மார்ட்டின் ஆகியோர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய அவரது மகன்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகன்களிடம் விசாரணை: இதனிடைய ஜெயக்குமாரின் மூத்த மகன் கருப்பையா ஜெஃப்ரின் இளைய மகன் மார்ட்டினிடம் தனிப்படை காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர் அதில் பல்வேறு கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் இருந்த கையெழுத்தும் முன்னர் எழுதிய கடிதங்களில் இருந்த கையெழுத்தும் வேறு மாதிரியாக இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஜெயக்குமாரின் மரணத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications