2 மாத தவணை கட்டலை.. வீடு புகுந்து பொருட்களை வீசி எறிந்த தனியார் பைனான்ஸ்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை: 2 மாத தவணைத் தொகை செலுத்தாத நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எறிந்து அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
Recommended Video
நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சங்கு பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக சோழமண்டலம் கம்பெனியில் இருந்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இந்த கடனுக்கு மாதம் தோறும் வட்டியாக ரூ 7,183 செலுத்தி வந்தனர். கொரோனாவால் சங்குபாண்டியனின் பொருளாதாரம் பெறும் சரிவை சந்தித்தது.

இரு மாத தவணை
இதனால் தற்போது வரை தவணை பணத்தைக் கட்டி வந்த நிலையில் இரண்டு மாதங்களாக அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவால் தமிழகம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

வங்கி ஊழியர்கள்
இவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இவர் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் இவரின் மனைவியிடம் இரண்டு மாத தவணை செலுத்தும்படி வற்புறுத்தி உள்ளனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசியதோடு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி உள்ளனர்.

மனைவி தற்கொலை
இதனால் மனமுடைந்த அவரது மனைவி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அவரது கணவர் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்து நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் எங்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த தனியார் வங்கி ஊழியர்கள் மீது கந்து வட்டி கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மாதா மாதம்
நாங்கள் தவணை தொகையை மாதாமாதம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கந்து வட்டி கும்பல் போல் வீட்டிலிருந்த பொருட்களை வீசி எறிந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி புகார் மனுவில் தெரிவித்தனர். வெறும் 2 மாசம் தவணை கட்டாததற்கு வீட்டை காலி செய்யவும் தொல்லை தருகிறார்கள் என்றும் புகார் அளித்தனர்.












Click it and Unblock the Notifications