ஜெயக்குமார் தனசிங்கின் மரண வாக்குமூலமா?.. அப்படி எந்த கடிதமும் இல்லையே! மறுக்கும் நெல்லை போலீஸ்!
நெல்லை: நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் மரண வாக்குமூலம் கடிதம் அளித்ததாக கூறுவது தவறு என நெல்லை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 30-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். ஜெயக்குமார் தனசிங் மரண வாக்கு மூலம் என்ற பெயரில் புகார் மனு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3ஆம் தேதி ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
புகாரளிக்க வந்த போதுதான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை அவருடைய மகன் எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதம் ஏப்ரல் 30 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த கடிதம் புகாரளித்த போதுதான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
விசாரணை தொடர்ந்த போது மே 4 ஆம் தேதி காலை அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டு வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்த மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு நெல்லை காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் "எனது வீட்டை சில மர்மநபர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என 4 பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களாக தந்தையை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் எழுதிய கடிதத்தில் ரூபி மனோகரன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாரின் உடற்கூராய்வில் அவருடைய வயிற்றின் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது கொலையா, தற்கொலையா என சந்தேகம் எழுந்தது. ஆனால் உடற்கூராய்வு தகவல் மூலம் அது கொலை என உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications