"ஆட்சியில் பங்கு என டிமாண்ட் கிடையாது.. யார் பெரும்பான்மையோ அவர்களே முதல்வர்" - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி தரப்படும்? என்பது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்ற எந்த டிமாண்டும் எங்களிடம் கிடையாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது அவர்களது கூட்டணிக்காக இருக்கலாம். திமுக தொடர்ந்து அடுத்தடுத்த முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது.

அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை இருக்கும் போது கூட்டணி ஆட்சி இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? என்ற அடிப்படையில் அவர் பேசியுள்ளார். தமிழக முதல்வர் சொல்வதை பார்த்தால் அச்சமும், பயமும் திமுகவிற்கு வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு போதும் குடும்ப ஆட்சி எடுபடாது. நேற்று முதலமைச்சராக கலைஞர், இன்று ஸ்டாலின், நாளை அவரது மகன் உதயநிதி முதல்வராக வருவார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். யார் தேர்தலில் அதிகம் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் அமைச்சர்கள்.
திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? அல்லது விஜய் கட்சியுடன் அவர்கள் சொல்வார்களா? என்பது தான் கேள்விக்குறி. இருந்தாலும் கனிமொழி காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
திமுக ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரையிலும் ஸ்டிக்கர் ஒட்டும் முறையை பின்பற்றி வருகிறது. யாரோ கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என சொல்வது எப்படி சரியாகும்? என தெரியவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் நீட் தேர்வு குறித்த அச்சத்தை எடுத்துரைத்து, கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தார்.
சாலை போக்குவரத்து, விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து போன்றவைகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி உண்மையாக சித்தரிக்கிறார்கள். திமுக தோல்வி பயத்தால் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை.. நிதி வரவில்லை என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளது. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, லாக்கப் டெத் மரணம் அதிகரிப்பு போன்றவை இந்த ஆட்சியில் உயர்ந்துள்ளன.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கண்டிப்பாக அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது இலக்கு. ஆட்சியில் பங்கு என்ற எந்த டிமாண்ட்டும் எங்களிடம் கிடையாது. தேமுதிகவிடம் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. ஓபிஎஸ்ஸை அழைப்பது தொடர்பாக இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications