5 மணி நேரம் ஆகியும் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் யாரும் ஓட்டு போட வரல.. தேர்தல் புறக்கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராம மக்கள், இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி நேரமாகியும் மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதற்கிடையே, கிருஷ்ணன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீலா என்பவர் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் தனது வாக்கைச் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆங்காங்கே சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி நேரமான பிறகும் ஒருவர் மட்டுமே வாக்களித்துளார்.

No Votes Cast for 5 Hours Nellai Village Boycotts Election Seeking Justice

பெரும்பத்து கிராமத்தில் மொத்தம் 969 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அப்படி இருந்தும் இதுவரை யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. கிருஷ்ணன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீலா என்பவர் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் தனது வாக்கைச் செலுத்தினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினருடன் போலீசாரும் அங்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆவணங்களை சரிபார்த்து மை வைத்து வாக்காளர்களை வாக்களிக்க வழிகாட்டுதலை வழங்க தேர்தல் அலுவலர்களும் தயாராக உள்ளனர்.

இருப்பினும் கடந்த மார்ச் 2 ஆம் தேதி சாதிய ஆணவ கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததற்கும், ஆறு பேர் காயமடைந்ததற்கும் கண்டனம் தெரிவித்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குச்சாவடி இருக்கும் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி இரவு, டீக்கடை வளாகத்தில் மர்ம கும்பல் நடத்திய சரமாரி தாக்குதலால் மாற்றுத்திறனாளியான ஜான் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டாஆகிய இருவர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஜாதி மோதல் மற்றும் போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடந்த இந்த கொடூரக் கொலையில், 8 பேர் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தக் காரணத்தை குறிப்பிட்டு பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆர். இசக்கிமுத்துவும், தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ச.செல்வம், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.576% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில் கடந்த 2021 தேர்தலை காட்டிலும் இது 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+