சபாநாயகரே.. அப்பாவு முன் தரையில் அமர வைக்கப்பட்ட பெண்கள்.. கேன்சரில் இருந்து மீண்டு வந்தோர் அவதி
திருநெல்வேலி: மார்பக புற்றுநோயை வென்றோருக்கான வெற்றி விழா திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பேசினார். அப்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பெண்களுக்கு இருக்கை வழங்கப்படாமல் அப்பாவு முன்பு தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அப்பாவு. தற்போது தமிழக சட்டசபையில் சபாநாயகராக செயல்பட்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும், அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அப்பாவு பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தான் மார்பக புற்றுநோயை வென்றோரின் வெற்றி விழா திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புற்றுநோய் சிகிச்சை துறைகள் இணைந்து இந்த விழாவை நடத்தியது. இதில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பெண்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு போதிய அளவில் சேர் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெண்கள் பலரும் அப்பாவு முன்பு தரையில் அமர வைக்கப்பட்டனர். இதில் முதியவர்களும் அடங்குவர். இதனால் தரையில் அமர்ந்து அவர்கள் சிரமப்பபட்டனர்.
அதாவது மார்பக புற்றுநோயை வென்று வந்தவர்களுக்கு என்று இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் நினைத்ததை விட அதிகமான பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால் பலருக்கும் சேர் என்பது கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அப்பாவு தற்போது தமிழக சட்டசபை சபாநாயகராக உள்ளார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே இப்படியா? என பலரும் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications