"தியாகத் தலைவியே வருக.." நெல்லை, திருச்சியில் பரபர போஸ்டர்.. உற்று பார்த்தால்.. ஷாக்கான அதிமுகவினர்
நெல்லை: இதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாக சசிகலாவை வரவேற்று அதிமுகவில் சிலர் போஸ்டர் அடித்துக் கொண்டிருந்தனர். இப்போது முதல் முறையாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படத்தை போட்டே போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
Recommended Video

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து பெங்களூரிலுள்ள ரிசார்ட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில், நெல்லை, மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சில அதிமுக பிரமுகர்கள் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினர்.
இப்படி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியுள்ளளது.

முதல்வர் படம்
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரது படங்களோடு சசிகலாவை வரவேற்கும் போஸ்டர்கள் நெல்லையில் புதிதாக முளைத்துள்ளன.
சசிகலாவை வரவேற்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வின் முன்னாள் பொறுப்பாளரான சுப்பிரமணிய ராஜா இப்படி ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளார். இதைப் பார்த்ததும் ஏதோ முதல்வர், துணை முதல்வரே சசிகலாவை வரவேற்கிறார்களோ என்று கட்சியினர் குழப்பமடைந்தனர். ஆனால் இது அவர்கள் ஒப்புதல் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டராம். ஏற்கனவே தன்னிச்சையாக போஸ்டர் ஒட்டி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியிலும் இதே மாதிரி
இதேபோல, திருச்சி மாவட்டம், முசிறியில் சசிகலாவை வரவேற்று கிளை செயலாளர்கள் சம்சுதீன், ராஜ்பாபு ஆகியோர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கழகத்தின் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என குறிப்பிட்டுள்ள நிலையில் போஸ்டரில் டிடிவி தினகரன் படம் இடம் பெறாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவினர் கோபம்
கட்சித் தலைமைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் படங்கள் பயன்படுத்தியது அதிமுக தொண்டர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தொடரும் சசிகலா ஆதரவு
சசிகலாவுக்கு ஆதரவாக, விளம்பர பதாகை அமைப்பது, போஸ்டர்கள் ஓட்டுவதுஉள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மீது மீது கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் நிலையில், தங்கள் பெயர்கள், பரபரப்பாக பேசப்படுவதற்கு இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications